தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு பதவியேற்றவுடன் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலைய துறையில் அமைச்சர் சேகர் பாபு பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம், ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்பது, கோவில்களின் சொத்துகளை இணையத்தில் ஆவணப்படுத்துவது போன்ற சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் நேற்று அதிகாரிகளுடம் ஆலோசனை நடத்திய பிறகு விருப்பம் இருந்தால் பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.


இந்த விவகாரம் தொடர்பாக சன்நியூஸ் தொலைக்காட்சியில், நேற்று கேள்விக்களம் விவாத நிகழ்ச்சியில் விவாதம் நடத்தப்பட்டது. இதில்  பேராசிரியர் ராமசுப்ரமணியன் (அரசியல் விமர்சகர்),  ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் (வேத ஆகம பண்டிதர்), வழக்கறிஞர் வாஞ்சிநாதன் (பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் தரப்பு வழக்கறிஞர்), வலசை ஜெயராமன் (இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு பிரதிநிதி), கலையரசி நடராஜன் (தமிழ் சைவ பேரவை) ஆகியோர் பங்கேற்றனர். இதில் இவர்கள் சில முக்கியமான கருத்துகள் மற்றும் விமர்சனங்களை முன்வைத்தனர். 




அதன்படி அரசியல் விமர்சகர் பேராசிரியர் ராமசுப்ரமணியன்,"இந்து சமயஅறநிலைய துறையில் அரசு கொண்டுவரும் மாற்றங்கள் மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பு இந்து ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோவில்களுக்கு பொருந்தாது. ஏனென்றால் 2015-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றமே ஒரு வழக்கின் தீர்ப்பில் இதை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் ஆகம விதிகளில், அஞ்சுகம் என்பதில் சிவ பிராமணர்கள் அர்ச்சனை மற்றும் பூஜை செய்யலாம் என்று உள்ளது. எனவே பெண்கள் அர்ச்சகர்கள் ஆகலாம் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை" எனக் கூறினார். 


வழக்கறிஞர் வாஞ்சிநாதன்,"அனைத்து சாதியினர் மற்றும் பெண்கள் அர்ச்சகர் ஆகலாம் என்பது சமூக சமத்துவம் சார்ந்த முடிவு. மேலும் இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சார்ந்த ஒன்று. 2015-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பது 2 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு. ஆனால் அதற்பின்பு சபரிமலை வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்துள்ளது. அதன்படி பெண்கள் கோவில்களுக்கு நுழைய எந்தவித தடையிம் இல்லை. அத்துடன் இந்த வழக்கில் பழைய நடைமுறைகள் மரபுகள் என்ற பெயரில் தனிமனித சுதந்திரம், தனிமனித உரிமைகளை மீறுவதாக இருந்தால் அதை நாம் நிச்சயம் மாற்றவேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். ஆகவே இந்த மாதிரியான பழைய மரபுகள் என்று கூறுவது மீண்டும் தீண்டாமைக்கு வழி வகுக்கும்" எனக் கூறினார். 




மேலும் வேத ஆகம பண்டிதர் ஸ்ரீனிவாச சாஸ்திரிகள், "பெண்கள் அர்ச்சகர் ஆவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை. ஆனால் ஒரு சில கோவில்களில் அவர்கள் பணியாற்ற முடியாது. அதற்கு ஆகம விதிகளிலும் தெளிவான விளக்கம் உள்ளது. அவர்கள் வீடுகளில் பூஜை செய்யலாம். ஆனால் ஆலையங்களில் மக்கள் சேவைக்கு என்று வரும்போது அவர்களுக்கு அந்த தீட்சை அதிகாரம் இல்லை. ஆகவே அவர்கள் அந்தக் கோவில்களில் பூஜை செய்யமுடியாது. ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோவில்களில் அவர்கள் பூஜை செய்ய அவர்களுக்கு தீட்சை கொடுக்கப்படவில்லை "என்ற கருத்துகளை முன்வைத்தார்.


இது தொடர்பாக இந்து அமைப்புகளின் கூட்டமைப்பை சேர்ந்த வலசை ஜெயராமன்,"தமிழ்நாட்டில் ஏற்கெனவே ஒரு சில கோவில்களில் பெண்கள் பூசாரிகளாக உள்ளனர். என்னுடைய குல தெய்வம் கோவிலில் கூட ஒரு பெண்தான் பூசாரியாக உள்ளார். ஆகவே பெண்கள் பூசாரி ஆவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் ஒரு சில கோவில்களுக்கு என்று ஆகம விதிகள் உள்ளன. அந்தக் கோவில்களில் அந்தந்த விதிகளின்படிதான் பூஜை செய்யமுடியும். அவற்றை யாரும் மீற முடியாது. மேலும் தமிழ்நாட்டில் பல கோவில்கள் தற்போது ஒரு வேளை பூஜை கூட செய்யப்படாமல் உள்ளது. அந்த கோவில்களை புணரமைத்து அங்கு அனைத்து சாதியினரைச் சேர்ந்தவர்களைக் கூட தமிழ்நாடு அரசு அர்ச்சகர்களை நியமிக்கலாம்" எனக் கூறினார். 




இந்த அறிவிப்பு தொடர்பாக தமிழ் சைவ பேரவையை சேர்ந்த கலையரசி நடராஜன், "பெண்கள் அர்ச்சகர்கள் ஆகலாம் என்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. ஏனென்றால், எந்த சைவ விதிகளோ, ஆகம விதிகளோ பெண்கள் கடவுளுக்கு பூஜை செய்யக்கூடாது என்று கூறவில்லை. அத்துடன் கடவுள் படைத்த உயிர்கள் ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் சமம்தான். எந்த இடத்திலும் பெண்கள் பூஜை செய்தால் கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று இல்லை. மேலும் கடவுளே ஒரு அர்த்தநாரீஸ்வரர் போன்ற தோற்றத்தில் உள்ளார். அவரே ஆண் மற்றும் பெண் சமம் என்ற கருத்தை நமக்கு வலியுறுத்துகிறார். எனவே பெண்கள் அர்ச்சகர் ஆவதற்கு எந்தவித தடையும் இல்லை. நாங்களும் முறையாக ஆகம விதிகள், வேதகங்கள் ஆகியவற்றை படித்துவிட்டு தீட்சை பெற்றுதான் அர்ச்சகராக உள்ளோம். ஆகவே பெண்களை அர்ச்சகர் ஆக்கலாம் என்ற இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்கப்படவேண்டியது" எனக் கூறினார். 


இவ்வாறு இந்த அறிவிப்பு பலரும் ஆதரவாகவும் எதிராகவும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க: இருளர் மக்களுக்கான வீடுகள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டு : உடனடி நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம்..!