செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டத்திற்குட்பட்ட செம்பாக்கம் ஊராட்சி சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மின்விளக்கு சாலை வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிதண்ணீர் பயன்பாட்டுக்காக அப்பகுதியில் ஒரே ஒரு ஆழ்துளை கிணறு மட்டும் அமைக்கப்பட்டுள்ளது.

 



இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் 56 குடும்பத்தினருக்கு கடந்த ஆண்டு  சூரிய ஒளியுடன் கூடிய ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த வீடுகளை பழங்குடியினரால் கட்ட முடியாது என்ற நிலையில்  ஒப்பந்ததாரர்கள் மூலம் கட்டப்படுகிறது.



 

தற்போது தளம் போடும் நிலையில் வீடுகள் தரமற்ற முறையில் கட்டப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது வீடு கட்டப்பட்டு வரும் இடத்தில் தண்ணீர் வசதி முற்றிலும் இல்லாத நிலையில் ஒப்பந்ததாரர்கள் வெளியிலிருந்து தண்ணீரை வாகனங்கள் மூலம் கொண்டுவந்து கட்டுமான பணிகளை செய்து வருகின்றனர்.

 



கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு போதிய அளவு தண்ணீர் ஊற்றி வலுப்படுத்தாததாலும், குறைந்த அளவில்  சிமெண்ட் கலவையை பயன்படுத்தியதாலும்  கட்டிமுடிக்கப்பட்ட சுவர்களை  கையால் தேய்த்தாலே  கலவைகள் கரைந்துகொட்டும் நிலையில் உள்ளது. தற்போது வேகவேகமாக தளம்போடும் பணிகள் நடைபெற்று வருவதால் இரண்டு ஆண்டுகளில் வீடுகள் சேதமடையும் என அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.



 

பல ஆண்டுகளாக வீடுகளின்றி  இருக்கும் இருளர் மக்களுக்கு அரசு  வீடு கட்டித் தருவது வரவேற்கத்தக்கது ஆனால் அந்த வீடுகளை தரமற்ற  முறையில் ஒப்பந்ததாரர் கட்டி வருவது வருத்தம் அளிக்கிறது. சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் உள்ள மக்களுக்கு குடிதண்ணீர் வசதி இல்லாத நிலையில் புதிதாக கட்டிவரும் வீடுகளுக்கு தண்ணீர்  ஊற்ற, ஒப்பந்ததாரர் வலியுறுத்துவதால் அப்பகுதி மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.  குடிதண்ணீருக்காக மட்டும் ஒரே ஒரு அடிபம்பு அமைத்துக் கொடுத்துள்ளனர். இந்த  ஒரேயொரு அடிபம்பையே 60-க்கும்  மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்த  வேண்டியுள்ளது. இதில் புதிதாக கட்டப்படும் கட்டிடத்தை வலுப்படுத்த  தண்ணீர் ஊற்றச் சொல்கின்றனர்.

 

குடி தண்ணீருக்கு வழியில்லாத சூழ்நிலையில் புதிய கட்டடத்திற்கு எவ்வாறு தண்ணீர் ஊற்ற முடியும். குடி தண்ணீருக்கு வழியில்லாத சூழ்நிலையில் புதிய கட்டிடத்திற்கு எவ்வாறு தண்ணீர் ஊற்ற முடியும்.  எனவே உடனடியாக எங்கள் பகுதிக்கு தண்ணீர் வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.



 

இதுகுறித்த செய்தி ABP NADU இணையதளத்தில் வெளியாகி இருந்தது. இதனைத்தொடர்ந்து  அங்கு பாழடைந்த நிலையில் இருந்த  ஆழ்துளை கிணற்றை சுத்தப்படுத்தி, அதில் மின் மோட்டார் பொருத்தி தற்போது அப்பகுதியில் கட்டப்படும் வீடுகளுக்கு தேவையான தண்ணீர்  வழங்கி வருகின்றனர்.

 

Read Also : -