பொங்கல் பெருவிழா அழைப்பிதழில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்ற பெயரை தவிர்த்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. 


தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






இந்த விழாவுக்காக அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழக ஆளுநர் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இதேபோல் தமிழ்நாடு அரசின் இலச்சினையும் (முத்திரை) இடம் பெறவில்லை  கடந்தாண்டுக்கான பொங்கல் மற்றும் சித்திரை பெருவிழா அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்றே இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 



தமிழ்நாடு வார்த்தை புறக்கணிப்பு 


கடந்த வாரம் சென்னை ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமம் ஒருங்கிணைப்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநிலத்தை தமிழ்நாடு என்றழைக்கப்படாமல் தமிழகம் என்றே அழைக்கப்பட வேண்டும் என தெரிவித்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. 


இந்தியா முழுவதும் எந்த ஒரு விஷயத்தை முன்னெடுத்தாலும் அதற்கு தமிழ்நாடு மட்டும் மறுப்பு தெரிவிப்பது வாடிக்கையாகி விட்டது. தமிழர்கள் தங்களை திராவிடர்களாக உணருகின்றனர். தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது என கூறினார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. 


சட்டப்பேரவையில் பரபரப்பு


நேற்றைய தினம் நடப்பாண்டின் தமிழ்நாடு அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது உரையில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு அரசு என்ற வார்த்தைக்கு பதிலாக THIS Government (இந்த அரசு) என தெரிவித்திருந்தார். 






இந்நிலையில் பொங்கல் பெருவிழா அழைப்பிதழை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மதுரை நாடாளுமன்ற தொகுதி எம்.பி., சு.வெங்கடேசன், கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது. நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார்.இதேபோல தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்தும் வாடகை வீட்டிலிருந்தும் ரோசப்பட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா?


மேலும் ஆளுநர் மாளிகையில் இருந்து சித்திரை விழாவுக்கு வந்த அழைப்பில் “தமிழ்நாடு ஆளுநர்” என்று இருந்தது. இப்பொழுது பொங்கல் விழாவுக்கு வந்துள்ள அழைப்பில் “தமிழக ஆளுநர்”என்று இருக்கிறது. நேற்று அவையிலிருந்து வெளியேறிய அதே வேகத்தோடு மாநிலத்தைவிட்டு இவர் வெளியேற்றப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.