கொழுமணிவாக்கம் ஊராட்சியில் உள்ள கோயில் குளம் படிக்கட்டு கட்டட செலவு குறித்து அனிதா சம்பத் பேசியிருப்பதில் உண்மையில்லை என தமிழக அரசு பதிலடி கொடுத்துள்ளது. 


கொழுமணிவாக்கம் ஊராட்சியில் உள்ள கோயில் குளத்தில் படிக்கட்டு கட்ட ரூ.11 லட்சம் செலவிட்டதாக அனிதா சம்பத் பேசிய காணொலி ஒன்று சமூக வலைதளத்தி பரவி வந்தது. அதில், “நான் வந்து மாங்காடு பக்கத்தில் இருக்கிற கொழுமணிவாக்கம் என்ற இடத்தில் இருக்கேன். இங்க ஒரு போர்டு போட்டு இருக்காங்க. இந்த போர்ட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம்; அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்; கொழுமணிவாக்கம் ஊராட்சி; திருக்குளத்திற்கு நடைபாதை, படிகட்டு மேம்பாட்டு பணி; மதிப்பீடு ரூ. 11.36 லட்சம் என போட்டுருக்காங்க. இந்த படிகட்டை பாருங்க. இதை போட 11 லட்சம் ரூபாய் ஆகுமா? இந்த பணத்தில் வீடே கட்டுறாங்க. நானும் சுத்தி எதாவது கட்டியிருப்பாங்கன்னு தேடி பார்த்தேன். ஆனால் எங்கேயும் எதுவும் கிடையாது. இந்த ஒரு படிக்கட்டுக்கு எதுக்கு இவ்வளவு பணம்” என கேள்வி எழுப்பியிருந்தார். 


இதுகுறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் அதிகாரப்பூர்வ கணக்கு தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில், கொழுமணிவாக்கம் ஊராட்சியில் உள்ள கோயில் குளத்தில் படிக்கட்டு கட்ட ரூ.11 லட்சம் செலவிடப்பட்டதாக அனிதா சம்பத் பேசிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் பரப்படுகிறது. இது பொய் செய்தி. 


உண்மை என்ன?






காஞ்சிபுரம் மாவட்டம் கொழுமணிவாக்கம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2022 - 2023ஆம் ஆண்டில் திருக்குளத்தின் நடைபாதை, படிக்கட்டு மட்டுமின்றி, நீர் வரத்து மற்றும் வெளியேறும் வழி, மின் விளக்குகள், சிமெண்ட் இருக்கைகள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் செலவினங்கள்; 


படித்துறை அமைத்தால் - ரூ.1.70 லட்சம்
Inlet and Outlet - 66 ஆயிரம் 
நடைபாதை அமைத்தல் பேவர் பிளாக் - ரூ.6.17 லட்சம்
நடைபாதையைச் சுற்றிலும் மின்விளக்குகள் அமைத்தல் - ரூ. 96 ஆயிரம் 
மேசைகள் - ரூ. 1.73 லட்சம்
ஜிஎஸ்டி - ரூ.1.73 லட்சம் 


மொத்தம் - ரூ. 11. 36 லட்சம் 


என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வதந்தியை பரப்பாதீர்கள் எனவும் எச்சரிக்கை செய்துள்ளது.