மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பேட்மிண்டன் வீரர் மற்றும் பயிற்சியாளர் பத்ரி நாராயணன். இவர் 17 பாரா பேட்மிண்டன் போட்டியில் சர்வதேச மற்றும் தேசிய மாநில அளவிலான போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை  வென்றவர். கடந்த 10 ஆண்டுகளாக அரசு விளையாட்டு பயிற்சியாளராக முயற்சித்து வருகிறார். பல்வேறு வகையில் கோரிக்கைகளை முன்வைத்து வரும் இவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மதுரையில் நேரில் சந்தித்து மனு அளித்திருந்தார், ஆனால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பேட்மிண்டன் வீரர் பத்ரி நாராயணனுக்கு அரசு வேலையை வழங்குமாறு நீதிமன்றமும் பரிந்துரை செய்தது.



இந்நிலையில் இன்றைய தினம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்த ஆய்வுக்காக சென்ற போது, அவரின் காரை திடீரென வழிமறித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். ஆனால் காரை நிறுத்தக்கூறிய மு க ஸ்டாலின் பத்ரிநாராயணனை அருகில் அழைத்தார். அப்போது தனக்கு அரசு பயிற்சியாளர் வேலை வேண்டும் என பேட்மிண்டன் வீரர் பத்ரிநாராயணன் கோரிக்கை மனுவை அளித்தார். அதனை பெற்றுக்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ''உடனடியாக உங்களுடைய கோரிக்கை மனு பரிசீலிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என அவரிடம் உறுதி அளித்தார். முதல்வரின் காரை வழிமறித்து குரலெழுப்பியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நாட்களாக முயற்சி செய்துவரும் மாற்று திறனாளி வீரருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பதாக அளித்துள்ள வார்த்தை நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.