தமிழக சட்டசபையில் 2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். அப்போது வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு ரூ.38 ஆயிரத்து 904 கோடியே 46 லட்சத்து 6 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று இருந்தது. குறிப்பாக 0 புதிய உழவர் சந்தைகள் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். 50 உழவர் சந்தைகளைச் சீரமைக்க 15 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மாலை நேரத்திலும் உழவர் சந்தைகள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். சிறுதானியங்களும் விற்க அனுமதிக்கப்படும். மதிப்புக்கூட்டும் பொருட்களை தயாரிக்கும் 292 இயந்திரங்களை 40% மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்க 5 கோடி ஒதுக்கீடு. பட்டியலினத்தைச் சேர்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு 20% கூடுதல் மானியம் வழங்க 5 கோடி ஒதுக்கீடு. தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு. திருவாரூர் மாவட்டத்தில் விளைபொருட்களுக்கு உரிய விலையைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில் விவசாயப் பொருட்களுக்கான தொழிற்பேட்டை அமைக்கப்படும்.




மேலும் அயிரை, செல் கெண்டை, கல்பாசு போன்ற உள்நட்டு மீன் வகை வளர்ப்புக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும். பம்பு செட்டுகளை தொலைவில் இருந்தே கைபேசி மூலம் இயக்க உதவிடும் தானியங்கி கருவிகளுக்கு 5,000 ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இரவு நேரத்தில் பம்பு செட்டுகளை இயக்கச் செல்லும் விவசாயிகள் பாம்புக் கடிக்கு ஆளாவதைத் தடுக்க இது உதவும். மிளகு, காப்பிக் கொட்டைகளை தரம்பிரிக்கும் மையம் நீலகிரியில் அமைக்கப்படும். 38 கிராமங்களில் மதிப்புக் கூட்டல், சந்தைப்படுத்துதல் மையம் அமைக்க 95 கோடி ரூபாய் ஒதுக்கீடு. தேனி, கோவை, குமரியில் பொது, தனியார் பங்களிப்புடன் மொத்த காய்கறி விற்பனை வளாகம் அமைக்கப்படும். 3 கோடியில் 5 தொழில் கற்கும் சிறு மையங்கள் அமைக்கப்படும் என முக்கிய அறிவிப்புகள் உள்ளடக்கியுள்ளது. 


இந்நிலையில் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் குறித்து தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் கூறியது..


தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வழங்குவதாக உறுதி அளித்த நெல்லுக்கான ஆதார விலை ரூ.2 ஆயிரத்து 500 மற்றும் கரும்புக்கான ஆதார விலையை ரூ.4 ஆயிரமாக பட்ஜெட்டில் அறிவிப்பார்கள் என எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் எதிர்பார்த்த அறிவிப்பு வரவில்லை. மேலும் இந்த பட்ஜெடில் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக பல அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.குறிப்பாக தானியங்கு கிடங்கள், வேளாண் மண்டங்கள், தென்னைகன்று வழங்குதல், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் பருத்தி, நெல், கரும்பு ஆகியவற்றுக்கு உரிய நிதியை விரைந்து வழங்க வேண்டும் என்றார். அதேபோன்று நெல் கொள்முதலை மாநில அரசே எடுத்துகொள்ள வேண்டும், அதுவும் உரிய நேரத்தி கொள்முதல் செய்யவேண்டும் என கோரிக்கையை முன்வைகிறோம் என தெரிவித்தார். மொத்தத்தில் இந்த வேளான் பட்ஜெட் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை தந்ததுள்ளது என்றார்.