அன்பு ஜோதி ஆசிரம வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தவிட வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். 


அமித்ஷாவிற்கு அண்ணாமலை கடிதம்:


விழுப்புரம் அருகேயுள்ள குண்டலபுலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஆசிரம நிர்வாகி ஜூபின் தவிர, அவரது மனைவி மரியா ஜீபின் உட்பட 8 பேரை கெடார்  போலீசார் கைது செய்தனர். இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


அவர் தனது கடிதத்தில், ”திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. எதிர்பாராதவிதமாக பணியில் இருந்த ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அந்த விவகாரம் நாளிதழில் தலைப்புச் செய்தியாக வந்த பிறகுதான் மாநில காவல்துறை குற்றத்தில் ஈடுபட்ட திமுக செயலாளரை கைது செய்தது.


மனித கடத்தல்:


இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் ஜூபின் பேபி மற்றும் அவரது மனைவி மரியா ஆகியோரால் அன்பு ஜோதி ஆசிரமம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தில் இளம் குழந்தைகள், நடுத்தர வயதுடைய ஆண்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோரை சட்டவிரோத காவலில் வைத்தல், சித்திரவதை, பாலியல் வன்கொடுமை மற்றும் சந்தேகத்திற்குரிய மாநிலங்களுக்கு இடையேயான மனித கடத்தல் ஆகியவற்றை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். இந்த விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்பான விரிவான கட்டுரை இன்றைய நாளிதழில் வெளியாகியுள்ளது.


சமீபத்தில், கெடார் காவல் நிலையத்தில் ஹாலிதீன் என்பவர்  அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து ஜபருல்லா என்பவர் காணாமல் போனதாக புகார் அளித்தார். இதனையடுத்து, நடந்த விசாரணையில் ஆசிரமத்தில் இருந்த 52 பேர் பெங்களூரில் உள்ள ஆசிரமத்துக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கேயும் அவர்களை காணவில்லை. மேலும் 14 கைதிகளும், ஜபருல்லாவும் ஆசிரமத்தில் இருந்து தப்பிச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


போலி கடிதங்கள்:


மேலும் விசாரணையின் போது இறந்த உடல்களை அடக்கம் செய்ய ஆசிரமத்திற்கு அங்கீகாரம் அளித்ததாக காவல்துறையின் போலி கடிதங்கள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் இந்த கடத்தல் நெட்வொர்க்குக்கு இணைப்புகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.இந்த தம்பதியினர் 2005 ஆம் ஆண்டு முதல் இந்த ஆசிரமத்தை நடத்தி வருகின்றனர். துரதிர்ஷ்டவசமாக இத்தகைய சட்டவிரோத செயல்பாடு இத்தனை ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்துள்ளது.


2021 ஆம் ஆண்டில், விழுப்புரத்தில் உள்ள ஆசிரமத்திலிருந்து மாற்றப்பட்ட 15 கைதிகள் பெங்களூரு கேஆர்சி ரோடு தொட்டகுப்பியில் உள்ள ARK மிஷன் ஆஃப் இந்தியாவுக்கு மாற்றப்பட்டனர். இந்த இடமாற்றங்கள் மற்றும் பல சந்தர்ப்பங்களில் இறப்புக்கான உண்மையான பதிவுகள் எதுவும் பராமரிக்கப்படாததால், இது உறுப்பு கடத்தல் என்று சந்தேகிக்கப்படும் வழக்காக உள்ளது.


சி.பி.சி.ஐ.டி.


சமீபத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராஜஸ்தானில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் வட இந்தியாவைச் சேர்ந்த 160 ஆதரவற்ற நபர்களை அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் சந்திக்க ஏற்பாடு செய்தார். இந்த வகையில் அன்பு ஜோதி ஆசிரமம் தமிழ்நாட்டிலிருந்து இடமாற்றத்தை எளிதாக்கியது என்று நம்பப்படுகிறது.


இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். இந்த ஆசிரமத்தில் மனித கடத்தல் மற்றும் உறுப்பு கடத்தல் தொடர்பான சந்தேகத்திற்குரிய வழக்கு தவிர, பல தசாப்தங்களாக பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.இந்த வழக்கை தமிழக டிஜிபி சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளார். 


ஆனால் இந்த வழக்கு 3 மாநிலங்களை உள்ளடக்கியதாக இருப்பதால், சட்டப்பூர்வ மாற்றத்தை கருத்தில் கொண்டு, தயவுசெய்து சிபிஐ நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும், இந்த மனித கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய வேண்டும்” எனவும் அந்த கடிதத்தில் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.