சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, அவர் பேசியதாவது, 


" தமிழ்நாட்டை வளமான, வலிமையான மாநிலமாக உருவாக்கிடவும், அனைத்துத் துறைகளிலும் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்திடச் செய்திடவும் நாள்தோறும் எண்ணற்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நமது தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். சமூகம், அரசியல், பொருளாதாரம், மக்கள் மேம்பாடு அனைத்திலும் நவீனமயம் ஆகியவற்றைக் கொண்ட திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம்.




சுயமரியாதைக் கொள்கையில் தந்தை பெரியார், இனமான எழுச்சியில் பேரறிஞர் அண்ணா. நவீன தமிழகத்தைக் கட்டமைப்பதில் தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர், மொழி உரிமையில் இனமான பேராசிரியர் ஆகியோரின் வழிநின்று சமூக மேம்பாட்டிலும் தனிமனித வளர்ச்சியிலும் இந்த நாடு ஒருசேர வளர் வேண்டும். அந்த வளர்ச்சி அனைத்துத் தரப்பினரின் நலனை முன்னிறுத்தியிருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் நாம் நாள்தோறும் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகிறோம். இது தமிழகத்தை மேம்படுத்தும் என்பதையும் தாண்டி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களால் உற்றுக் கவனிக்கப்பட்டு வருகிறது.


ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிடும் வகையிலான அறிவிப்புகளை மட்டுமல்லாமல் அறிவிக்காத பல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம் என்பதை இந்தப் பேரவை உறுப்பினர்களும், நாட்டு மக்களும் நன்கு அறிவார்கள். தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட வாக்குறுதிகளில் 2021-2022 மற்றும் 2022-2023ம் நிதி ஆண்டுகளில் மாநிலத்தின் ஆளுநர் உரையில் 77 அறிவிப்புகள், ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு


எனது செய்தி வெளியீட்டின் மூலமாக 150 அறிவிப்புகள்


* சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன்கீழ் 60 அறிவிப்புகள்


• மாவட்ட ஆய்வுப் பயணங்களின் போது வெளியிட்ட 77 அறிவிப்புகள்


* எனது உரைகளின் வழியாக 46 அறிவிப்புகள்


* நிதிநிலை அறிக்கையில் 255 அறிவிப்புகள்


• வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் 237 அறிவிப்புகள்


* அமைச்சர்களால் மானியக் கோரிக்கைகளின் போது வெளியிடப்பட்ட 2.425 அறிவிப்புகள்


என மொத்தம் 3,327 அறிவிப்புகள் நமது அரசால் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த அறிவிப்புகளின் மீதான தொடர் நடவடிக்கைகள் கவனமாகக் கண்காணிக்கப்பட்டு உரிய மேல் நடவடிக்கைகள் தொடரப்பட்டு வருகின்றன.




அதன்படி, வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், 78 விழுக்காடு அளவிலான அறிவிப்புகளுக்கு, அதாவது 2 ஆயிரத்து 607 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் / அறிவுரைகள் வெளியிடப்பட்டு, அவற்றில் 791 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1,816 அறிவிப்புகள் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. 666 அறிவிப்புகளுக்கு உரிய ஆணைகள் வெளியிட தொடர்புடைய துறைகளால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 54 பணிகள் ஒன்றிய அரசின் பரிசீலனையில் உள்ளன.


இவ்வாறு அவர் பேசினார்.


மேலும் படிக்க : TN Assembly Session Today LIVE: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தினை இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் வேதனை..!


மேலும் படிக்க : முற்றிலும் மறுக்கிறேன்; விசாரணையை சந்திக்கத் தயார் - ஜெ. சிகிச்சை விவகாரத்தில் சசிகலா பரபரப்பு அறிக்கை!