தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதையடுத்து இன்று மருத்துவ அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு வரும் 20-ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இரவு 10 முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கினை அறிவித்துள்ளது தமிழக அரசு. மேலும் சில தளர்வுகளுடன் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. 


தமிழக அரசின் அறிவிப்புப்படி, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி மவரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படமாட்டாது. தமிழ்நாட்டில் இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்து மேற்கூறிய காலகட்டத்தில் இரவு 10 மணி முதல் 4 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது. 




அதேசமயம் விமான நிலையம், ரயில் நிலையம் செல்ல வாடகை ஆட்டோ டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். மேலும் அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனை, மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள் சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து முழுநேரமும் செயல்படலாம். பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்படும்.




அதேபோல ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் அமல்படுத்தப்படும் அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது. இதை கடைபிடிக்கதவறும் நிறுவன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம் தினசரி பத்திரிக்கை விநியோகம் மருத்துவமனை சேவைகளுக்கு எந்தவித தடையும் இல்லை. அதேசமயம் முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மதியம் 12 முதல் மதியம் 3 மணி வரையிலும் மாலை 6 முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். மேலும் Zomato மற்றும் ஸ்விக்கி போன்ற ஆன்லைன் உணவு விநியோகம் செய்ய நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதி உண்டு. 




நீலகிரி மாவட்டம் கொடைக்கானல் ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைப் பகுதியிலும் அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. பிளஸ் டூ மாணவர்களுக்கான தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்படும் பொது தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது இருப்பினும் அவர்களுக்கு தற்போது நடைபெற்று வரும் செய்முறைத் தேர்வு மட்டுமே ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.  


முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும், திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வோர் எண்ணிக்கை 100 நபர்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும். மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு, புதிதாக குடமுழுக்கு/திருவிழாக்கள் நடத்துவதை சம்பந்தப்பட்ட நிர்வாக அமைப்புகள், தற்காலிகமாக ஒத்திவைக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அத்தகைய நிகழ்வுகளுக்கு தற்போதைய சூழ்நிலையில் அனுமதி அளிக்கப்பட மாட்டாது. கல்லுாரி/பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழியாக (online) வகுப்புகளை எடுக்க வேண்டும்.


அரசு மற்றும் தனியார் கல்லுாரி/பல்கலைக்கழக தேர்வுகள் இணைய வழியாக (online) மட்டுமே நடத்தப்பட வேண்டும்.கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள். இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்படுகிறது. கோடை கால முகாம்கள் (summer விதிக்கப்படுகிறது. camps) நடத்த தடை தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் உடைய தனியார் மருத்துவமனைகளுடன், விருப்பப்படும் தங்கும் விடுதிகள் (Hotels) இணைந்து கோவிட் பாதுகாப்பு மையங்களாக (Covid Care Centre) செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இதனை சுகாதாரத்துறை ஆய்வு செய்து, தேவைப்படும் அனுமதியை வழங்கலாம்.


கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க மாவட்டம் தோறும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். கொரோனா நோய்த்தொற்று சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், நோய்தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் பரிசோதனைகளை அதிகரிக்கவும், நோய்த்தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை ஓரிரு நாட்களில் கண்டறிந்து பரிசோதனை மேற்கொண்டு, அந்தந்த பகுதிகளிலேயே கட்டுப்படுத்தி, நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகத்தை முடுக்கி விடவும் உரிய அறிவுரைகளை வழங்கினார்கள்.




மருத்துவமனைகளில் பிராண வாயு (oxygen) இருப்பை போதுமான அளவு வைக்க, கூடுதலாக தமிழ்நாட்டிலேயே அதன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அதனை உற்பத்தி செய்ய முன்வரும் தொழிற்சாலைகளுக்கு உடனடியாக தற்காலிக உரிமம் அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொழிற்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.


அரசு ஊரடங்கை அமல்படுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால்தான், நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும். பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை தவறாமல் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக் கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்து, அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, இந்த நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த உதவ வேண்டும். மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும். பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கவேண்டுமென தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.