TN 12th Exam 2025: +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து...

TN 12th Exam 2025: தமிழ்நாட்டில் +2 மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

தமிழ்நாட்டில் இன்று தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர். இதையடுத்து, மாணவர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர் தொடங்கி, பல்வேறு தலைவர்களும், தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி +2 பொதுத்தேர்வுகள்

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று(03.03.25) தொடங்கி வரும் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை சுமார் 8.21 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த தேர்வுகளை சுமூகமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. வழக்கம்போல் தேர்வுகள் 3 மணி நேரம் நடைபெறும் நிலையில், மாணவர்கள் வினாத்தாளை படிக்க கூடுதலாக 10 நிமிடங்களும், தங்கள் விவரங்களை சரிபார்க்க 5 நிமிடங்களும் வழங்கப்படுகிறது. சரிபார்ப்புக்காக, மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டின் நகலை, அடையாளச் சான்றுடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

+2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆளுநர், முதலமைச்சர் மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். நேற்று இரவே தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை பதிவிட்டுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, இரவு நன்றாக உறங்கி, தேர்வுகளை அமைதியாகவும், நம்பிக்கையுடனும் அணுகுமாறு மாணவர்களை அறிவுறுத்தியுள்ளார்.

இதேபோல், தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியை நேற்று பதிவிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த தேர்வுகள் மாணவர்கள் வாழ்வின் அடுத்த நிலைக்கான படிக்கட்டுகள் என கூறி, ஆல் த பெஸ்ட் என வாழ்த்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மாணவர்கள் சிறப்பான முறையில் ஆல் பாஸ் செய்து, அவர்களின் கனவுகள் மெய்ப்பட வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், கேள்விகளுக்கான பதில்களை எவ்வித பதட்டமும் இல்லாமல் எழுதுமாறும், படிக்கும் ஆர்வத்துடன் உடல்நலனிலும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மாணவச் செல்வங்கள் நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் தேர்வுகளை எழுதுமாறு கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தம்பி, தங்கைகள் தேர்வுகளை துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, வெற்றி பெற்று வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துவதாக கூறியுள்ளார்.

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola