கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் இன்று  நடைபெறுகிறது.


கார்த்திகை தீபம் 2022ல் வரும் கார்த்திகை மாதம் 20ம் தேதி, டிசம்பர் 6ம் நாள் செவ்வாய் கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது.


கார்த்திகை மாதம் என்றாலே நினைவுக்கு வருவது கார்த்திகை தீபத்தருநாள் தான். கார்த்திகை தீபத்தன்று வீடுகளில் மற்றும் கோவிலில் விளக்கேற்றி கொண்டாடுவார்கள். கார்த்திகை மாதத்தில்‌ கார்த்திகை நட்சத்திரமும்‌, பெளர்ணமியும்‌ ஒன்றாக வரக்கூடிய நன்னாளில்‌ திருக்கார்த்திகை தீபம்‌ கொண்டாடப்படுகிறது


உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும் பஞ்சபூத தளங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திக்கை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை நன்னாளில் திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டு இருக்கும். அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து மாலையில் மலை மேல் மகாதீபம் ஏற்றப்படும். அனைத்து சிவன் ஆலயங்கள் மற்றும் முருகன் ஆலயங்களிலும் சிறப்பாக கார்த்திகை தீபம் கொண்டாப்படும். மக்கள் வீடுகளிலும் இனிப்புகள் வைத்து பூஜை செய்து, வீடுகள் முழுவதும் தீபம் ஏற்றி, வாழ்வின் இருள் நீங்கி ஒளி வீச கடவுளை வழிபடுவர்.


டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலையில்‌ பரணி தீபம்‌ அண்ணாமலையார்‌ கருவறையில்‌ ஏற்றப்பட்டு, பின்னர்‌ அர்த்த மண்டபத்தில்‌ ஐந்து தீபங்களாக இவை காட்டப்படும்‌. கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தில்‌ இந்த தீபம்‌ காட்டப்படுவதால்‌ 'பரணி தீபம்‌" என்று பெயர்‌ பெற்றது. அதைதொடர்ந்து அன்று  மாலை 6 மணிக்கு, சிவனே மலையாக காட்சி தரும் 2,668 அடி உயர மலை உச்சியின் மீது மகா தீபம் ஏற்றப்படும்.


2668 அடி உயர மலை உச்சியில் 5 அடி உயரம், 250 கிலோ எடை கொண்ட கொப்பரையில் 3500 லிட்டர் நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் காடா துணிகளும் மகாதீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும்.  இந்த தீப கொப்பரை  விஷ்ணு, சிவன் என்ற மூன்று அடுக்குகளால் ஆனது தான் என நம்பப்படுகிறது. சிவனும் சக்தியும் ஒன்று என்ற தத்துவதை விளக்கும் வகையில் டிசம்பர் 6ஆம் தேதி கோவில் வளாகத்தில் தீபதரிசன மண்டபம் எதிரில் சுமார் 6 மணி அளவில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி தாண்டவம் ஆடிய பின்னரே மலையின் உச்சியில் உள்ள கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து, மலை உச்சியில் நிலை நிறுத்தப்படும் மகாதீப கொப்பரைக்கு பாரம்பரிய வழக்கப்படி சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். 


இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும். துர்க்கை அம்மன் உற்சவம் கொடியேற்றத்திற்கு முந்தைய 3 நாட்கள் காவல் தெய்வங்கள் உற்சவம் நடைபெற்றது.


சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மாட வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து 26-ந் தேதி (சனிக்கிழமை) மூஷிக வாகனத்தில் விநாயகரும், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதி உலா நடைபெற்றது. முதல் நாள் விழாவின் போது காலை மற்றும் இரவில் விநாயகர், வள்ளி தெய்வானையும் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற்றது. மற்ற நாட்களில் காலையில் விநாயகர், சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெறும்.


கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. முன்னதாக காலையில் 63 நாயன்மார்கள் வீதி உலா நடக்கிறது. பள்ளி மாணவர்கள் நாயன்மார்களை சுமந்து மாடவீதியை சுற்றி வருவார்கள். தொடர்ந்து விழாவின் 7-ம் நாளான வருகிற டிசம்பர் மாதம் 3-ந் தேதி (சனிக்கிழமை) பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற உள்ளது.


கடந்த 2 வருடங்களாக பக்தர்களின்றி கோவில் வளாகத்திற்குள்ளேயே தேரோட்டம் நடைபெற்றதால் இந்த ஆண்டு மாட வீதியில் நடைபெற உள்ள தேரோட்டத்தை காண மக்கள் மற்றும் பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.


கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கு சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, விரிவான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும், பாதுகாப்புப் பணிகளை காவல்துறையும் செய்து வருகிறது.