நவம்பர் மாதம் கள்ளச்சந்தையில் விற்கப்படவிருந்த 3520 கிலோ துவரம்பருப்பு, 87 லிட்டர் மண்ணெண்ணெய் உள்ளிட்ட ரேசன் பொருள்கள் மீட்கப்பட்டதுடன், இதில் தொடர்புடைய 191 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 இது குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:


”அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு  பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.


அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.


ரேசன் பொருள்கள் பதுக்கல்


உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் ஆகியோர் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பான தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் மீதும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955இன் படி வழக்குப்பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அவ்வாறு, தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம் 1980இன் படி தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.


கைது செய்யப்பட்ட நபர்கள்


அதன்படி, 21.11.2022 முதல் 27.11.2022 வரையுள்ள ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயற்சி செய்யப்பட்ட 11,73,395 ரூபாய் மதிப்புள்ள 1809 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி மற்றும் மண்ணெண்ணெய் 87 லிட்டர், 72 எரிவாயு உருளை, துவரம் பருப்பு 3520 கிலோ ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 47 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.


மேலும், இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட 191 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு நபர்கள் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டம் 1980இன் படி கைது செய்யப்பட்டுள்ளனர்”  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: Mummy Golden Tongue : 2000 ஆண்டுகள் பழமையான மம்மியின் தங்க நாக்குகள்.. தொல் பொருள் ஆய்வாளர்கள் தந்த சுவாரஸ்ய தகவல்..