வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர்,காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், கடலோர மற்றும் உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாளையை பொருத்தவரை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள்,நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது




ஆகஸ்ட் 27 மற்றும் 28ம் தேதியை பொருத்தவரை,  நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில்
ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.


சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:


24.08.2021 முதல் 28.08.2021 வரை: தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.