கீழடி' என்கிற ஒற்றைச் சொல், தமிழ்நாட்டு மக்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்டு வரும் கீழடியில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு இந்த ஆய்வைத் தொடங்கியது.


கீழடியில் தொன்மையான மனிதர்கள் ஏராளமானோர் கூடி வாழ்ந்ததற்கான முக்கியச் சான்றுகள் கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது. தற்போது கீழடியில் தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பாக 7-ஆம் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. கீழடி, கொந்தகை அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்யப்பட்டது. தற்போது மணலூரில் அதிகளவு தொல்லியல் பொருட்கள் கிடைக்கவில்லை என அங்கு மட்டும் ஆய்வு நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி துவங்கிய தொல்லியல் ஆய்வு அக்டோபர் மாதத்தை கடந்து அகழாய்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  கீழடியில் அதிகளவு நீர் நிலை அமைப்பு இருந்தற்கான சான்றுகள் கிடைத்து வருகிறது. கொந்தகையில் முதுமக்கள் தாழிகளுடன் கூடிய எலும்புகள் கிடைத்து வருகின்றன.  அகரம் பகுதியில் சுடுமண்ணால் தயார் செய்யப்பட்ட முத்திரை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை அமைச்சார் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.


அகரத்தில் நடந்துவரும் அகழாய்வில் தொடர்ச்சியாக அலங்கார பொருட்கள், பொம்மைகள், தங்க பொருட்கள், புகை பிடிப்பான்  உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டதன் தொடர்ச்சியாக  கழுத்து மற்றும் காது ஆகியவற்றில் அணியும் இரண்டு தங்க ஆபரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அறுங்கோண வடிவில் உள்ள இந்த ஆபரணத்தின் வட்ட வடிவ கழுத்து பகுதியில் புள்ளிகள் வரையப்பட்டுள்ளன. ஆபரணத்தை கழுத்தில் அணிவதற்கு வசதியாக நடுவில் துளையிட்டு சிறிய இணைப்பை ஏற்படுத்தியுள்ளனர். காதில் அணியும் அணிகலன் குண்டுமணி போன்ற வடிவத்தில் காணப்படுகிறது.  ஏற்கனவே கடந்த ஆறாம் கட்ட அகழாய்விலும் அகரத்தில் வீரராகவன் காசு எனப்படும் தங்க காசு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே அகரம் பண்டைய காலத்தில் வணிக நகராக திகழ்ந்திருக்க கூடும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.






அடுத்த மாதத்துடன் அகழாய்வு பணிகள் முடிவடைய உள்ளதாக கூறப்படும் நிலையில் அகழாய்வுப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கீழடி அகழாய்வில் தற்போது அகரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி வருகிறது. இது குறித்து தொல்லியல் ஆர்வலர்கள்,‘‘அகரம் தளத்தில் வீரராகவன் காசு எனப்படும் தங்கக்காசு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே அகரம் ஒரு வணிக நகராக திகழ்ந்ததற்கு சான்றுகள் கிடைத்து வருகிறது. வணிகர்களை கவர்வதற்காக வண்ண பொம்மைகள் தயாரித்தவர்கள் தங்களை அடையாளப்படுத்த முத்திரை உள்ளிட்டவை பயன்படுத்தியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. கார்பன் டேட்டிங் ஆய்வுக்கு பின்னர் முழுவிவரங்கள் தெரியவரும்’’ என்றார்.