தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு  25 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தில் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.  இதன் காரணமாக நேற்று பல மாவட்டங்களில் மழை பெய்தது. இன்னும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்காத நிலையில், இந்த கோடை மழையால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 


இதனிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில்  25 மாவட்டங்களில் மழை பெய்யும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்,செங்கல்பட்டு, விழுப்புரம்,கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


சென்னையில் நேற்று பகல் பொழுதில் குளிர்ச்சியாக சூழல் நிலவிய நிலையில், நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை எண்ணூர் துறைமுகத்தில் 10 செ.மீ, மாதவரத்தில் 9 செ.மீ., மீனம்பாக்கத்தில் 3 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 3 செ.மீ., பதிவாகியுள்ளது. 


மீனவர்களுக்கான அறிவிப்பு 


இதனிடையே குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள், லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள் மற்றும் வட ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு மே 5 ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.