புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த வரும் 18-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது. மின்கட்டணம் செலுத்த நாளை கடைசி நாளாக இருந்த நிலையில் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:” கடந்த 03.12.2023 அன்று தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலுவெடுத்து 04.12.2023 அன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து  தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 3 தினங்களாக மின்கட்டணம் செலுத்துவதில் சென்னை. காஞ்சிபுரம். திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆணைப்படி, மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கீழ்க்கண்டவாறு காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக  நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு  தெரிவித்துள்ளார்.


இது குறித்து, நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:


1. மின் உபயோகிப்பாளர்களின், மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 04.12.2023 முதல் 07.12.2023 வரை இருந்த நிலையில், மேற்காணும் சூழலின் காரணமாக அபராதத் தொகை இல்லாமல் 18.12.2023 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.


2. ஏற்கனவே, மின் உபயோகிப்பாளர்கள் மின்கட்டணத்துடன் 04.12.2023 முதல் 06.12.2023 வரை அபராதத் தொகை செலுத்தி இருப்பின், அந்த அபராதத் தொகை அடுத்து வரும் மாத மின்கட்டணத் தொகையில் சரிக்கட்டப்படும்”.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க 


Half Yearly Exam Postponed: மழை பாதிப்பு: தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு- புதிய தேதிகள் அறிவிப்பு


Michaung Cyclone: மிக்ஜாம் புயல்! பொதுமக்களுக்கு உதவ வேண்டுமா? வாட்ஸ்அப் எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!Cyclone Michaung Rescue: தலைநகரை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல்.. பெருமூச்சு விடத் தொடங்கிய சென்னை..