‛மாநிலங்களுக்கு  அதிக அதிகாரம் கேட்கிற காரணத்தால் ஏதோ மத்தியில் இருக்கக் கூடிய அதிகாரத்தை பறிக்கிறோம் என்கிற பொருளல்ல. மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கக்கூடாது என்பதல்ல. ஆனால் அதே நேரத்தில் மாநிலங்களுக்கு போதுமான அதிகாரத்தை வழங்கவிட வேண்டும்.நாட்டின் பாதுகாப்பையும் ஒருமைப்பாட்டையும் பார்த்துக்கொள்வதற்கான அதிகாரத்தை மத்திய அரசு வைத்துக்கொள்ளட்டும்” – 1967-68’க்கான நிதிநிலை அறிக்கையைச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்த அப்போதைய முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை இவ்வாறு பேசினார்.


சி.என்.அண்ணாத்துரை வழியில் வந்த மு.கருணாநிதி

அண்ணா வழியில் அயராது உழைப்போம்


ஆதிக்கமற்ற சமுதாயம் அமைப்போம்


இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்


வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்


மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி.

என்கிற ஐந்து கொள்கைகளை கட்சிக்காக வகுத்தார்.


இவர்கள் வழியில் வந்த ஸ்டாலின், கூட்டணி அமைத்ததன் அடிப்படையே மாநில சுயாட்சி என்பதாகத்தான் இருந்தது. மற்ற கட்சிகள் தேர்தலுக்காக 2021ல் கூட்டணி சேர்ந்தது என்றால் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ், வி.சி.க.,ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய கூட்டணி  மூன்று வருடங்களுக்கு முன்பே மாநில சுயாட்சி மாநாட்டை நடத்தியது.10 ஆண்டு அதிமுக ஆட்சியின் மீது இருக்கும் மக்களின் எதிர்ப்பு மனநிலையால் 2021 தேர்தலில் எப்படியும் தி.மு.க. கூட்டணிதான் வெற்றிபெறும் என அத்தனைக் கருத்துக்கணிப்புகளும் சொல்லின. தி.மு.க.கூட்டணி வென்றது. புதிய அரசின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.ட்விட்டரில் கொட்டித்தீர்த்த வாழ்த்து மழைக்கு அவரது அளித்த பதில்கள்தான் ஹைலைட்டாகப் பேசப்பட்டன.


’தேசிய வளர்ச்சிக்கும் பிராந்திய முன்னேற்றத்துக்கும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திலும் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்’ என ட்விட்டரில் இருகரம் விரித்து அழைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘மாநில வளர்ச்சிக்காக ஒன்றிய அரசுடன் இணைந்து உழைக்கக் காத்திருக்கிறேன். கூட்டாச்சி ஒத்துழைப்பின் வழி நாம் நிச்சயம் இந்தக் கொரோனாவை வெல்வோம்’ எனப் பதிவிட்டிருந்தார்.






உள்துறை அமைச்சர் அமித்ஷா ’மாநில அரசுகள் மத்திய அரசுடன் தோளோடு தோள் நின்று மக்கள் நலனுக்காக உழைக்கும் என நம்புகிறேன்’ எனக் குறிப்பிட்டதற்கு, ’கூட்டாட்சியின் கடமைகளை நிறைவேற்றவும் மக்கள் நலன் காக்கவும் ஒன்றிய அரசோடு தமிழ்நாடு என்றும் துணைநிற்கும்’ என பதில் ட்வீட் செய்திருந்தார் முதலமைச்சர்.






காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விளையாட்டு வீரர் நவ்ஜோத் சிங் சித்து, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்ரே என அனைவரது வாழ்த்துக்கான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில்களில் கூட்டாட்சியும் ஒன்றியமும் இடம்பெற்றிருந்தன.






முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வழிமொழியும் வகையில் அமையப்பெற்றிருந்தது அவரது அமைச்சர்களின் செயல்பாடுகள்.


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை தொடர்பான மாநிலங்களுடனான கணொளிக் கூட்டத்தைப் புறக்கணித்தார். அதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தவர் தற்போதைய கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.






உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தனது அண்மை செய்தியாளர் சந்திப்பில், புதிய கல்விக் கொள்கைக்குத் தமிழ்நாட்டில் இடமே கிடையாது எனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்.






நிதியமைச்சராகப் பேட்டியளித்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. நிதியுரிமையைப் பெறுவதுதான் தனது முதல் பணி எனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்.


இப்படி பதவியேற்று ஒருமாதம் கூட முடியாத நிலையில் மத்திய அரசுடனான உரையாடல்கள் ஒவ்வொன்றிலும் மாநில உரிமைகளைத் தொடர்ந்து முன்வைத்துப் பேசி வருகிறது இந்தப் புதிய அமைச்சரவை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அண்ணாதுரை பாணி ஆரோக்கியமானதா? இனிவரும்காலங்களில் தெரியவரும்.