தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேலும், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை  ஒட்டிய  தென்மேற்கு  வங்கக்கடல் பகுதிகளில்  ஒரு  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று  திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் நாளை, தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் நேற்று காலை முதல் அவ்வப்போது நல்ல மழை பதிவானது. இன்று அதிகாலை முதல் நகரம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.


இந்நிலையில் வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில், இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை இயல்பிலிருந்து 16% குறைவாக பதிவாகி உள்ளது என தெரிவித்தார்.


மேலும்,  அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை வட கடலோர மாவட்டங்களிலும், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாகவும்,  உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றார்.


கனமழை பொருத்தவரை டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடக் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழையானது தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தற்போது வரை பதிவான மழையின் அளவு 35 செ.மீ. சராசரி அளவு மழை 30 சென்டிமீட்டர் இயல்பான அளவைவிட 16 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளதாக தெரிவித்தார்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை: (மில்லிமீட்டர்)


நுங்கம்பாக்கம் 64.5, மீனம்பாக்கம் 19.3, கடலூர்- 2.0, தஞ்சாவூர்- 1.0, காரைக்கால்- 27.0, காஞ்சிபுரம் இந்துஸ்தான் பல்கலைக்கழகம்- 18.0, கொலப்பாக்கம்- 15.5, சத்தியபாமா பல்கலைக்கழகம்- 12.5, திருவள்ளூர் குட் வில் பள்ளி வில்லிவாக்கம் 36.5, பூந்தமல்லி - 12.0, புழல்- 33.5 மில்லிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.