தென்மேற்கு பருவ மழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. அதன்படி கேரள மற்றும் பிற மாநிலங்களில் பரவலாக மழை பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமழை பதிவாகி வருகிறது.


அதன்படி தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில், திருவாரூர் மற்றும் நாகையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கும், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது / மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


நேற்று பிற்பகல் நகரின் அனேக இடத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பதிவானது. குறிப்பாக மடிப்பாக்கம், வேளச்சேரி, கிண்டி, ஆலந்தூர், அடையாறு, ஆதம்பாக்கம், மேடவாக்கம், தேனாம்பேட்டை என பல்வேறு பகுதிகளில் கனமழை பதிவானது.


இதை தவிர இரவு முழுவதும் லேசான சாரல் மழை பெய்தது. தற்போது அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.


தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி,    ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.