விழுப்புரம் : செல்போனில் ரீல்ஸ் பார்த்தப்படியே அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநரை நிரந்தர பணிநீக்கம் செய்து போக்குவரத்துதுறை அதிகாரிகள் நடவடிக்கை, சென்னை பெரம்பூர் அருகே செல்போனில் ரீல்ஸ் பார்த்தப்படி, அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநரால் பயணிகள் அலறினர். சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை சாலையை கவனிக்காமல் ஓட்டுநர் வாகனத்தை இயக்கியதை, பெண் பயணி ஒருவர், தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அந்த வீடியோ நடத்துநரிடம் காண்பித்து புகார் அளித்துள்ளார். 


செல்போனில் ரீல்ஸ் பார்த்தப்படியே அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்


திருப்பதியில் இருந்து பயணிகளுடன் அரசு பேருந்து சென்னை மாதவரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது ரீல்ஸ் பார்த்தபடியே, கவனக்குறைவாக பேருந்தை ஓட்டுநர் இயக்கி வந்துள்ளார். சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரையிலும், சாலையை கவனிக்காமல் ஓட்டுநர் வாகனத்தை இயக்கியதை பெண் பயணி ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை போக்குவரத்து பணிமனையில் உள்ள ஓட்டுநர்களிடம் காண்பித்து புகார் அளித்தார். தொடர்ந்து இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலானது. இந்நிலையில் அந்த ஓட்டுநர் நிரந்தர பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.


நிரந்தர பணிநிறுத்தம் செய்யப்பட்டார் ஓட்டுநர்


இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;


திருப்பதியில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி வந்து கொண்டிருக்கும் போது ரீல்ஸ் பார்த்தபடி அரசு பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் என்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த காணொளியில் வரும் ஓட்டுநர் விழுப்புரம் கோட்டம், திருவள்ளூர் மண்டலம், கோயம்பேடு II பணிமனையைச் சார்ந்த தற்காலிக ஓட்டுநர் பார்த்திபன் பணி எண். Y6116 ஆவார். தவறு செய்த ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது நிரந்தர பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.