இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் தங்களது தொழில் புரியும் இடங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தாங்கள் பயன்படுத்தும் பல்வேறு வகையான வாகனம் மற்றும் ஆயுதங்களுக்கு ஆயுத பூஜையை கொண்டாடி வரும் நிலையில் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பாக ஆயுத பூஜை நடைபெற்று வருகிறது.


 


 




இதன் ஒரு பகுதியாக இன்று காலை முதலே பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவன ஊழியர்கள் தங்கள் நிறுவனத்திற்கு மற்றும் வீட்டுக்கும் தேவையான வாழைப்பழம், தேங்காய், வாழை இலை, மா இலை, தோரணங்கள், பொறி, சுண்டல் பூக்கள் உள்ளிட்ட பொருட்களை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.


 




இந்நிலையில் ஆயுத பூஜை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கரூர் பேருந்து நிலையத்தில் வெளிப்புறம் அமைந்துள்ள ஆட்டோ உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் சங்கத்தின் சார்பாக ஆட்டோவிற்கு ஆயுத பூஜை கொண்டாட்டம் நடைபெற்றது.


 




ஆட்டோ ஸ்டாண்ட் ஆயுத பூஜையை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கு வண்ண மாலை அணிவித்து தொடர்ச்சியாக ஆட்டோ ஸ்டாண்ட் முன்புறம் வாழை இலையில், பொரி, சுண்டல், தேங்காய், பழம் உள்ளிட்ட பிரசாதங்களை வைத்து கற்பக விநாயகர் ஆலய சிவாச்சாரியார் அர்ச்சனை செய்தார். அதைத் தொடர்ந்து அனைத்து ஆட்டோக்களுக்கும் தூப தீபங்கள் காட்டப்பட்டு, மகா தீபாராதனை  நடைபெற்றது.


 


 




தொடர்ந்து அங்கிருந்து அனைத்து ஆட்டோக்களுக்கும் நீர் பூசணிக்காய் மூலம் ஆலாத்தி எடுக்கப்பட்டு அதனை சாலையில் உடைத்து திருஷ்டி கழித்தனர். அப்பகுதி பொதுமக்களுக்கு ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் சங்கத்தின் சார்பாக இலவசமான பொருட்களை வழங்கி தங்களது ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடினர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆட்டோ ரங்கராஜ் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.