மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் மட்டுமே இன்புளுயன்சவுக்கான RT PCR பரிசோதனை என நெறிமுறைகளை வெளியிட்டது பொது சுகாதாரத்துறை.


இன்புளுயன்சா காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் இன்புளுயன்சா சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி ப்ளு காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றனர்.


A வகை : லேசான காய்ச்சல்,  இருமல்


B வகை :   1. தீவிர காய்ச்சல், அதிக இருமல்


                     2. தீவிர காய்ச்சலுடன் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டோர், இணைநோய்கள் இருப்பவர்கள். 


மேற்கூறிய A, B பிரிவினர் யாருக்குமே இன்புளுயன்சாவிற்கான பரிசோதனையோ, மருத்துவமனையில் அனுமதியோ தேவையில்லை  என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்களுக்கு வீட்டுத்தனிமைப்படுத்தலே போதுமானது எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.


 C வகை : தீவிர காய்ச்சல், தொண்டை வலி ஆகியற்றோடு மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சுவலி,  இரத்த அழுத்த குறைவு ஆகியவை இருப்பவர்கள், குழந்தைகளுக்கு இடைவிடாத தொடர் காய்ச்சல், உணவு உண்ணாமை, மூச்சுவிடுவதில் சிரமம் ஆகியவை இருப்பவர்கள்.


c வகை பிரிவினருக்கு Influenza வை கண்டறிவதற்கான RT PCR பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும், மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. வீட்டுத்தனிமைப்படுத்தலில் இருப்போர் 24 மணி நேரமும் 104,108 எண்களில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தெளிவுப்படுத்திக்கொள்ளலாம்


மருத்துவமனைகளை பொறுத்தவரை தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் ஆய்வகங்களில் பணி புரிவோர் கட்டாயம் N85 முகக் கவசமும் மற்ற அனைவரும் மூன்றடுக்கு முகக்கவசமும் அணிந்திருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.


இதைத்தவிர மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும், கர்ப்பிணிகள்  மற்றும் இணைநோயுள்ளோரும் ப்ளூ தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் கொரோனா உடன் இந்த காய்ச்சலும் அதிகம் பரவி வருகிறது. தற்போது இருக்கும் சூழலில், அடினோவைரஸ், இன்ஃப்ளூயன்சா வைரஸ் மற்றும் கொரோனா வைரஸ் ஆகிய மூன்று வைரஸ்களும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை ஃப்ளூ காய்ச்சலுக்கு இந்தியாவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த காய்ச்சல் தொற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு தரப்பில் அறிவுருத்தப்பட்டுள்ளது. 


மேலும் முதியவர்கள், இணை நோயாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படும் என்பதால் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், வெறும் கைகளால் கண் அல்லது முகத்தை தொடுவதை தவிர்க்க வேண்டும், காய்ச்சல் வந்தால் சுய மருத்துவம் எடுத்துக்கொள்ளாமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.