புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பரவி வரும் புதிய வைரஸ் காய்ச்சலைத் தடுக்கும் பொருட்டு, கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 


மார்ச் 16 முதல் 26ஆம் தேதி இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக சிறியவர், பெரியவர் என அனைத்துத் தரப்பினரும் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு மக்கள் பயப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.


இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பரிந்துரையுடன் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை சீசன் அறிகுறி தொடங்குவதற்கு முன் மற்றும் பின் நாட்களில் நோய்களை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.


டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிப்பு


சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் திட்டம் மூலமாக மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் யானைக்கால் நோய் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க, புதுச்சேரி அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கடந்த ஆண்டு 1,673 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு சுமார் 500 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டதால் கடந்த 2 வருடங்களாக பரவக்கூடிய மழைக்கால காய்ச்சல் குறைவாக இருந்தது. கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும், கூட்ட நெரிசல்களில் செல்வதாலும் இந்த மழைக் காலத்தில் பரவும் சாதாரண வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.


பள்ளிகளுக்கு விடுமுறை


இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பரவி வரும் புதிய வைரஸ் காய்ச்சலைத் தடுக்கும் பொருட்டு, கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மார்ச் 16 முதல் 26ஆம் தேதி இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


இந்த நிலையை சமாளிக்க புதுச்சேரி சுகாதாரத்துறை புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாமில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியிலும், ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையிலும், காய்ச்சலுக்கான பிரத்யேக வெளிப்புற சிகிச்சையும், உள்புற சிகிச்சை வார்டும் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.


இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.