விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பறைசாற்றும் வகையில் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின ஊர்வலத்தில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளில் ஒன்று நெல்லை மாவட்டத்திற்கு  வருகை தந்தது.  இந்த ஊர்தியில் வேலுநாச்சியார், வேலூர் சிப்பாய் புரட்சி, மருது சகோதரர்கள், வீராங்கனை குயிலி, வீரபாண்டிய கட்டபொம்மன், ஒண்டிவீரன், பூலித்தேவன், அழகு முத்துக்கோன், காளையார்கோவில் கோபுரம் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 



 

மாவட்ட எல்லையான உத்தம்பாண்டிகுளம் பகுதியில்  தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், முன்னாள் சட்டப்பேரவைத்தலைவர் ஆவுடையப்பன்  மற்றும் பொதுமக்கள் இந்த வாகனத்திற்கு மேளதாளம் முழங்க  மலர் தூவி உற்சாக  வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து அந்த வாகனம் அந்த பகுதியில் சிறிதுநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது, அலங்கார வாகனத்தை அப்பகுதி மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். அங்கிருந்து புறப்பட்ட அலங்கார ஊர்தி நெல்லை புதிய பேருந்து நிலையம் பகுதியில் மக்கள் பார்வைக்காக நிறுத்தப்பட்டது.

 



இதனை திரளான பொதுமக்கள், மாணவ மாணவிகள் பார்வையிட்டு சென்றனர். சுதந்திர போராட்ட தியாகிகளின் அலங்கார ஊர்தியை  பார்வையிட்ட மக்கள்  புகைப்படம் எடுத்துக் கொண்டனர், சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களை நமது இளைய சமுதாயமும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற வகையில் தமிழகம் முழுவதும் இந்த ஊர்திகளை அனுப்பிய தமிழக முதல்வருக்கு பொதுமக்கள்  நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறுகையில், சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் இந்த ரத ஊர்வலம்  முதல்வர் ஆணைப்படி நடத்தப்படுகிறது,  இந்த ரதத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், பூலித்தேவனும், ஒண்டி வீரன் உள்ளிட்ட வீரர்களின் சிற்பங்கள்  இடம் பெற்றுள்ளது.

 


 

நெல்லை  புதிய பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் மாணவர்கள் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பின் இந்த ஊர்தி  இங்கிருந்து புறப்பட்டு வள்ளியூர் சென்று பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்கிறது. மேலும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த  ஊர்தி  ஊர்வலம் அமைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.