தஞ்சாவூர் திமுக கோட்டையாக இருந்த தொகுதியை 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கைப்பற்றியது. தொடர்ந்து, தஞ்சாவூர் நகராட்சி (இப்போது மாநகராட்சி), தஞ்சாவூர் மக்களவை தொகுதி எனப் படிப்படியாக திமுக இழந்தது.

   இதனை தொடர்ந்து 2019  ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தல், 2021  ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் தஞ்சாவூர் தொகுதியில் திமுக வெற்றி பெற்றுத் தக்க வைத்துள்ளது. தஞ்சாவூர் நகராட்சியில் 1996 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து திமுக வெற்றி பெற்று வந்த நிலையில், 2011 ஆம் ஆண்டில் முதல் முதலாக அதிமுக வெற்றி பெற்றது. 156 ஆண்டுகள் பழைமையான இந்த நகராட்சி 2014 ஆம் ஆண்டில் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்ட பிறகு நடைபெறும் முதல் மறைமுக  தேர்தலாகும். தஞ்சாவூர் மாநகராட்சியை அதிமுகவிடமிருந்து, திமுக கைப்பற்றியுள்ளது. இதில் மொத்தமுள்ள 51 வார்டுகளில் திமுக 34 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 1 வார்டிலும், சிபிஎம் 1 வார்டிலும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் 1, மதிமுக 1 என 40 இடங்களிலும், அதிமுக 7, பாஜக 1, அமமுக 1, சுயேட்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதில், திமுக கூட்டணி 40 வார்டுகளை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் தஞ்சாவூர் மாநகராட்சியையும் பிடித்து, திமுக கோட்டையாக மாறியிருக்கிறது.




இந்நிலையில் திமுக கட்சி தலைமை சண்ராமநாதனை தஞ்சை மாநகராட்சி மேயராகவும், அஞ்சுகம் பூபதி துணை மேயராக அறிவித்துள்ளது. மேயராக அறிவிக்கப்பட்ட சண்ராமநாதனின் தந்தையார் பெயர் சண்முகம். தஞ்சை மாநகராட்சி 45 வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது தஞ்சாவூர் மத்திய, தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக பதவி வகித்து வரும் இவர், தஞ்சாவூர் நகராட்சியாக இருந்த போது 40 வது வார்டில் போட்டியிட்டு 2006 மற்றும் 2011ம் ஆண்டு என இரண்டு முறை கவுன்சிலராக தேர்வாகினார்.  இந்நிலையில், இவர் நடந்த முடிந்த மாநகராட்சி தேர்தலில், 45 வார்டில் போட்டியிட்டு, 965 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து இவர் கடந்த 26 ஆண்டுகளாக கட்சியில் உள்ளார்.


மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமூகத்தைச் சார்ந்த இவருக்கு திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலினுடன் மிகவும் நெருக்கமானவராக இருக்கிறார். மேலும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடனும் நெருக்கமாக இருந்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், தனக்கு தான் மேயர் பதவி வழங்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் கேட்டு, உத்தரவாதம் வாங்கி இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில். அதன் படி தஞ்சை மாநகர மேயராக சண்.ராமநாதன் பதவியை வாங்கி விட்டார்.


மேலும், சண்.இராமநாதன், ஸ்டாலின்  குடும்பத்துக்கு நெருக்கமானவர். ஸ்டாலின் தொடங்கி உதயநிதி  வரை சண்ணை பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு  அறிமுகமானவர். ஆனால் அதை எந்த இடத்திலும் காட்டி கொள்ள மாட்டார். கோஷ்டி அரசியலுக்குள் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். தலைமை நினைப்பதை செய்து முடிப்பார் தலைமையின் நேரடி தொடர்பில் இருப்பவர் தற்போது எம்எல்ஏவாக உள்ள நீலமேகம், சண். ராமநாதனை ஒரம் கட்ட பார்ப்பார். ஆனால் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், கட்சிக்காக பாடுபடுவார் என தஞ்சை மாவட்ட உடன்பிறப்புகள் கூறுகின்றனர்.


தனது ஆதரவாளருக்கு மேயர் பதவி வாங்க வேண்டும் என பல்வேறு நகர்வுகளை நகரத்தி வந்த எம்எல்ஏ நீலமேகம், சண். ராமநாதனை அறிவித்ததால், எம்எல்ஏ கோஷ்டியினர், அப்செட் ஆகியுள்ளனர். சண்ராமநாதனின் சகோதரரான ஜித்து என்கிற ராஜரத்தினம் திமுகவில் மாநில விவசாயி பிரிவு நிர்வாகியாக உள்ளார். அவர், மறைந்த எம்எல்ஏ நடராஜனிடம், விஸ்வாசமாக இருந்ததால், கட்சி பணிக்காக, அடிக்கடி திமுக தலைமைக்கு சென்று வரும் பொறுப்பை கவனித்து வந்தார்.


 



திமுக துணை மேயர் வேட்பாளர் அஞ்சுகம் பூபதி 


அப்போது அனைவரிடமும் பழகுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. அதன் பிறகு நடராஜன் மறைவிற்கு பிறகு, அவர், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கம் ஆனார். தற்போது அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் அவர், தனது சகோதரர் சண்ராமநாதனுக்கு மேயர் வாய்ப்பு வழங்க கட்சி தலைமைக்கு பரிந்துரை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதே போல் கடந்த எம்எல்ஏ தேர்தலின் போது, எம்எல்ஏ சீட் கேட்டு போராடினார். ஆனால் சீட் வழங்க வில்லை. இதனால் மேயராக வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என திமுகவினர் தெரிவிக்கின்றனர். இதே போல் அஞ்சுகம்பூபதி தனது அரசு மருத்துவர் பணியிலிருந்து விலகி விட்டு, எம்எல்ஏவாக போட்டியிட்டு, தோல்வி அடைந்தார்.  இந்த முறை நடந்த உள்ளாட்சி தேர்தலில் மேயராக வாய்ப்பு கிடைக்கும் என, திமுக தலைமையின் மீது நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் சண்.ராமநாதனை மேயராக கட்சி அறிவித்து, தனக்கு துணை மேயர் பதவியாவது வழங்கியுள்ளார்களே என மகிழ்ச்சி அடைந்துள்ளார்.