முதலமைச்சருக்கு 3ம் வகுப்பு மாணவி கடிதம்:


தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இன்றளவும் போதிய இட வசதி இல்லாததை காணமுடியும். நாம் படிக்கும் காலம் முதலே மரத்தடியில் படிக்கும் சூழ்நிலை இருந்தது. அக்காலம் தொட்டு இன்றுவரை இந்த மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. 


அந்த வகையில், தென்காசி மாவட்டம் திப்பணம் பட்டியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் போதுமான கட்டிடங்கள் இல்லை. மேலும், மாணவ, மாணவிகள் விளையாட இட வசதியும் இல்லை. இதையடுத்து அந்த பள்ளியில் படிக்கும் ஆராதனா என்ற 3ம் வகுப்பு மாணவி, கட்டிடங்கள் வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த மாதம் 28ம் தேதி கடிதம் எழுதி அனுப்பி வைத்தார். அந்த கடிதமும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 


வசதியே இல்லை:


அந்த கடிதத்தில், “எங்கள் பள்ளியில் இட வசதியே இல்லை. ரெண்டு பள்ளிக்கூடத்துக்கும் விளையாட்டு மைதானமே இல்லை. வகுப்பறை வசதியும் இல்லை. என்னோட தனித்திறமையை வளர்த்துக்க இங்க இடமே இல்லை. எனவே எங்க அம்மா அப்பா என்னை ஆறாம் க்ளாஸுக்கு வெளியூர் பள்ளிக்கூடத்துக்கு அதுவும் தனியார் பள்ளியில் சேர்க்க போறோம்ன்னு சொல்றாங்க. 


ஆனா எனக்கு அரசு பள்ளியில் அதுவும் எங்க ஊரு அரசு மேல்நிலைப் பள்ளியிலேயே படிக்கணும் என ஆசையா இருக்கு. ஆனா இந்த இட வசதியே இல்லாம எல்லோரும் ரொம்ப கஷ்டப்படுறாங்க ஐயா..


எங்க ஊர்ல அரசுக்கு சொந்தமான கோவில் இடம் சும்மா இருக்குன்னு எங்க வீட்டுல அப்பா அம்மா பேசுவதை கேட்டு இருக்கேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா நினைச்சா இந்த இடத்துல பள்ளிக்கூடம் வரும்னு சொன்னாங்க.. அப்போ நான் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு மனு அனுப்புறேன்னு சொன்னேன். அதுதான் ஐயா நான் மனு அனுப்புறேன். எப்படியாவது நீங்க எங்க ஊர் அரசாங்க கோயில் இடத்தில் மேல்நிலைப் பள்ளி கட்டி என்னைப் போல எங்களது ஊர் மாணவர்கள் எல்லோரும் இங்கே படிக்க உதவ வேண்டும் ஐயா.. நீங்க அடுத்த மாதம் தென்காசிக்கு வர்றீங்கன்னு எங்க அப்பா சொன்னாங்க, உங்கள நான் நேர்ல சந்திச்சு மனு கொடுக்க ஆசையா இருக்கு. எனது ஆசையை நிறைவேற்றி தாங்க ஐயா” என எழுதி இருந்தார். 


முதலமைச்சரின் உத்தரவு:


இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி சென்ற முதலமைச்சர் முக ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து, அந்த சிறுமியின் கடிதம் குறித்து பேசினார். தொடர்ந்து, சிறுமி ஆராதனா கோரிக்கை ஏற்று, அந்த பள்ளிக்கு முதற்கட்டமாக சுமார் 35 லட்சம் ரூபாய்க்கு பள்ளி கட்டிடங்கள் கட்டி தர உத்தரவிட்டார். மாணவியின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். 



இந்தநிலையில், தனது கோரிக்கையை ஏற்று பள்ளி கட்டிடம் கட்ட உத்தரவிட்ட முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து சிறுமி ஆராதனா மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.


அதில், “அனுப்புனர்:


த.ஆராதனா, (பிறந்த தேதி: 23/09/2015)


03ஆம் வகுப்பு,


ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, விணைதீர்த்த நாடார் பட்டி,


திப்பணம் பட்டி-627808. தென்காசி மாவட்டம்.


பெறுநர்:


மாண்புமிகு.திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு முதல்வர்.


மதிப்பிற்குரிய ஐயா!


நான் அனுப்புன மனுவை ஏற்றுக்கொண்டு எனது பள்ளிக்கு நிதி ஒதுக்கிய முதலமைச்சர் ஐயாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதே பள்ளியில் படிச்சு பெரிய ஆனா ஆகணும்னு சொன்னீங்க ஐயா. நிச்சயம் அதே மாதிரி நான் ஆவேன் ஐயா. அப்போதும் நீங்களே முதலமைச்சராக இருக்கணும் ஐயா.


ளங்க அம்மா, அப்பா ஊர் மக்கள் என்னோட நண்பர்கள் எல்லோரும் சந்தோச பட்டாங்க ஐயா. உங்கள நேர்ல சந்தித்து நன்றி தெரிவிக்க ஆசையா இருக்கு ஐயா!” என குறிப்பிட்டு இருந்தார். தற்போது இந்த கடிதமும் இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது.