ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் ஆலையை கையகப்படுத்த வெளிநாட்டு வாகன உற்பத்தியாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக டாடா குழுமத்துடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தெரிவித்தார். ஃபோர்டு இந்தியாவில் லாபம் ஈட்ட தவறியதால், செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் உற்பத்தியை நிறுத்தும் திட்டத்தை அறிவித்தது. 2022 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள வாகனம் மற்றும் என்ஜின் உற்பத்தி யூனிட்டை மூடுவதற்கான வேலைகளை கார் தயாரிப்பாளர்கள் செய்துவருகின்றனர். இந்நிலையில் கார் தயாரிப்பு ஆலையை வாங்குவதற்கு கடும் போட்டிகள் நிலவின. அதற்கான பேச்சுவார்த்தை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசிடம் நடைபெற்றது. செய்தியாளர்களிடம் பேசிய அவர் எந்தெந்த நிறுவனங்கள் ஆலையை வாங்க ஆர்வமாக உள்ளன என்று தெரிவிக்க முடியாது என்று கூறினார்.



மேலும் பேசிய அவர், “ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது, இது ஒரு வணிக விஷயம் என்பதால் இது குறித்த இறுதி முடிவை எடுக்கும் உரிமை ஃபோர்டுக்கு உள்ளது. நாங்கள் நிறுவனங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளை எளிதாக்கும் வேலையை மட்டுமே செய்கிறோம்," என்று அவர் கூறினார். ஃபோர்டு நிறுவனத்தின் ஆலையை வாங்குவதற்கு டாடா குழுமம் ஆர்வம் காட்டியதாகவும், நேற்று ஃபோர்டு நிறுவனத்தை சந்தித்ததாகவும் தங்கம் தென்னரசு கூறினார். ஃபோர்டு இந்தியா நிறுவனம் 2021 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் குஜராத்தில் செயல்படும் இரண்டாவது ஆலையிலும், 2022 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள ஆலையில் வாகனம் மற்றும் என்ஜின் உற்பத்தியையும் நிறுத்தும் என்று நிறுவனம் கடந்த செப்டம்பரில் தெரிவித்திருந்தது.



மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலையை முதற்கட்ட ஆய்வுக்காக பார்வையிட்டார், ஆனால் மாநில அரசு அவர்களிடம் இருந்து எந்த ஒப்பந்தத்தையும் கேட்கவில்லை. "அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவது ஃபோர்டு நிறுவனத்தின் கையில் தான் உள்ளது" என்று தங்கம் தென்னரசு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். தரவு நுண்ணறிவு நிறுவனமான குளோபல் டேட்டாவின் படி, அந்த ஆலையில் 25% மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு ஆலையை வாங்குவதற்கு எந்த நிறுவனங்கள் ஆர்வம் காட்டக்கூடும் என்று ஃபோர்டு, ஒரு அறிக்கையில் கூறியது: "எங்கள் உற்பத்தி வசதிகளுக்காக தேவைப்படும் மாற்றங்களை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம், ஆனால் அதுகுறித்து தற்போது பகிர்ந்து கொள்ள எதுவும் இல்லை." என்று கூறியிருந்தது. இதனால் மூடப்படும் இடத்தில் வரவிருக்கும் புதிய ஆலை வெளிநாட்டு நிறுவனத்தின் ஆலையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் உயர் ரக கார்கள் இந்தியாவில் தயாராகும் வாய்ப்புகள் வரும் என்றும், டெண்டர் விடப்பட்டால் அதிக அளவிலான தொகைக்கு அவர்களே வாங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.