தமிழ்நாட்டில் உள்ள 26 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


26 மாவட்டங்கள்:






ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருச்சி, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 26 மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில், இன்று மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 22ம் தேதி வரை, தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


வானிலை மையம் எச்சரிக்கை:


தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வருகிற 21-ந் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, ”மழை பொழியும் போது, ​​நீர்நிலைகளுக்கு செல்வதையும், செல்பி எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். வெள்ளம் சூழ்ந்துள்ள வனப்பகுதிகளுக்கு மாணவர்கள், இளைஞர்கள் செல்ல வேண்டாம், மின்கம்பிகள் அருகே செல்ல வேண்டாம்” என்றும் தீயணைப்புத்துறை எச்சரித்துள்ளது.


அதி கனமழைக்கு வாய்ப்பு:


அதன்பட், தேனி, தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய 3 நாட்கள் கனமழை முதல் அதிகனமழையும், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் கனமழை முதல் அதிகனமழையும் பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அதற்கான 'சிவப்பு' எச்சரிக்கையும் விடுத்துள்ளது. சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 21 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.


இன்று எங்கெல்லாம் மழை பெய்யக்கூடும்?


இன்று கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம்,மதுரை,சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. நாளை விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரியில் கனமழை முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை. புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை,மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.


21& 22ம் தேதிகளில் எங்கெல்லாம் மழை?


நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை), விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக்கனமழையும், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர். அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி,விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து வருகிற 22ம் தேதி தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


சென்னையில் மழை:


இதனிடயே சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு பரவலாக மழை பெய்தது. கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து லேசான மழை பதிவாகி வருவதால், கோடை வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.