திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகேயுள்ள செட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் டெல்லி கணேஷ் வயது (35). மாற்றுத்திறனாளியான டெல்லி கணேஷ் அதே பகுதியிலுள்ள டாஸ்மாக் பாரில் வேலைச் செய்துவந்துள்ளார். இவருடைய  மனைவி சுகன்யா வயது (31). டெல்லி கணேஷ் தினமும் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்து  மனைவியுடன் தகராறு செய்துவந்துள்ளார். காரணம், மனைவியின் நடத்தைமீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி, வெளியில் சென்றுவிட்டு வந்த மனைவி சுகன்யாவை சந்தேகப்பட்டு டெல்லி கணேஷ் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து, கீழ்நமண்டி கிராமத்தில் வசிக்கும் தனது தம்பி நவீன்குமாருக்கு வயது (28) தொலைபேசி  மூலம் தெரிவித்துள்ளார்  சுகன்யா. நவீன்குமாரும் புறப்பட்டு வந்து அக்காவின்  கணவரான டெல்லி கணேஷிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கிறார். இருவருக்கும் இடையே மோதலில் ஈடுபட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தின்போது டெல்லி கணேஷ் பின்பக்க மண்டையில் காயம் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார்.




 


கணவனை அடித்து கொன்ற மனைவி 


உடனடியாக என்னசெய்வது என்று தெரியாமல் உடனடியாக சுகன்யாவும் அவருடைய சகோதரர்  யாருக்கும் தெரியாமல், டெல்லி கணேஷ் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். மருத்துவர்களிடம், `தனது கணவர் இருசக்கர வாகனதில்  இருந்து கீழே விழுந்துவிட்டதாக’சுகன்யா நாடகமாடியுள்ளார். மருத்துவர்களும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சையளித்தனர். ஆனாலும், கடந்த மாதம் 22-ம் தேதி டெல்லி கணேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து, தெள்ளார் காவல் நிலைய காவல்துறையினர்  விபத்து கோணத்திலேயே வழக்கு பதிந்து சரிவர புலன் விசாரணை மேற்கொள்ளாமல் விட்டிருக்கின்றனர். இதனால், சுகன்யா இயல்பாக இருந்திருக்கிறார். கணவரை இழந்துவிட்டோம் என்ற வலியே, வேதனையோ அவரிடம் காணப்படவில்லை. 




 


போலீசார் விசாரணையில் சிக்கிய மனைவி கைது 


ஏற்கெனவே, மனைவியின் நடத்தை சரியில்லை என்று டெல்லி கணேஷ் சண்டைப் போட்டு வந்ததற்கும், திடீரென டெல்லி கணேஷ் இறந்ததற்கும் ஏதோ சம்பந்தமிருப்பதாகவும் வீட்டின் அக்கம்பக்கத்தினரும், கிராமத்தினரும் சந்தேகப்பட்டுள்ளனர். இதையடுத்து, டெல்லி கணேஷின் தாய் தமிழ்ச்செல்வி, `தனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது எனக்கூறி மருமகள் சுகன்யா, அவரது தம்பி நவீன்குமாரை விசாரியுங்கள்’ என தெள்ளார் காவல் நிலையத்துக்குச் சென்று புகாரளித்திருக்கிறார். அதன்பின்னர், பிரேத பரிசோதனை அறிக்கையை சரியாகப் படித்து பார்த்து, மனைவி சுகன்யாவையும், அவரது தம்பி நவீன்குமாரையும் பிடித்து காவல்துறை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அப்போது, கட்டையால் தாக்கி கணவரை கொலைச் செய்ததை சுகன்யா ஒப்புக்கொண்டார். தானும் உடந்தையாக இருந்ததாக அவரது தம்பி நவீன்குமாரும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். நேற்றைய தினம் இருவரையும் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து கைது செய்தனர். மேலும்  இருவரையும் வேலூர் சிறையில்  அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.