தமிழ்நாடு முழுவதும் மழை கொட்டித் தீர்த்து வரும் சூழலில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.



வடகிழக்கு பருவமழை:


மழை காலங்களில் தமிழக அரசின் பல்வேறு தரப்பினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், மின்துறையும் சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனி அதிகாரிகளை நியமித்து உதவி எண்களையும் அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கவதை முன்னிட்டு மின்சாரத்துறை பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.



  • வீடுகளில் மின் இணைப்பிற்கான சர்வீசஸ் – மெயிஜ் அருகில் ELCBஐ பொருத்தினால், வீடுகளில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கலாம்.

  • ஈரமான கைகளால் சுவிட்ச்களை இயக்கக்கூடாது. குளியலறையிலும், கழிவறையிலும் ஈரமான இடங்களில் சுவிட்ச்களைப் பொருத்தக்கூடாது.

  • ப்ரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி, மோட்டார், இஸ்திரி பெட்டி போன்றவற்றிறகு நில இணைப்புடன் கூடிய மூன்று பின் உள்ள பிளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

  • பிளக் பாயிண்ட்களில் மின்சார வயர்களை ப்ளக்குகள் இல்லாமல் பயன்படுத்தக்கூடாது.

  • உடைந்த சுவிட்சுகள், பிளக்குகள், பழுதுபட்ட ஒயர்கள் மற்றும் பழுதான மின் சாதனங்கள உங்கள பயன்பாட்டில் இருப்பின் அவற்றை தாமதமின்றி புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

  • சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும். குழந்தைகளை சுவிட்ச் போடச்சொல்லி விளையாடக்கூடாது.

  • விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றம். மின்சார வேலி அமைப்பதால் மனிதர்களுக்கும், கால் நடைகளுக்கும் மின்விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.

  • இடி, மின்னல், காற்று மற்றும் மழைக்காலங்களில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம்.

  • மின் மாற்றிகள் மற்றும் மின்பகிர்வு பெட்டிகள் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும்போது அதன் அருகில் செல்லக்கூடாது.

  • மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதை தொட முயற்சிப்போதோ கூடாது. மின்வாரிய அலுவலகத்திற்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.

  • மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்ட, மின்வாரிய அலுவலர்களை அணுக வேண்டும்.

  • மின் கம்பத்திலோ, மின்கம்பத்திற்கு போடப்பட்ட ஸ்டே வயரிலோ, மின் இணைப்பிற்கான சர்வீசஸ் பைப் அல்லது சப்போர்ட் பைப்பிலோ கொடிகள் கட்டி துணிகளை காய வைக்கக்கூடாது.

  • மின் கம்பத்திலோ அதை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக்கூடாது.

  • மின்சார கம்பிகளுக்கு அடியில் கட்டிடங்களை கட்டுவதை தவிர்க்க வேண்டும்.

  • டிரான்ஸ்பார்மர்கள், துணை மின் நிலையங்களைச் சுற்றி போடப்பட்டுள்ள வேலி அருகே சிறுநீர் கழிக்கக்கூடாது.

  • வீடுகளில், மின் கம்பங்களில் மற்றும் மின் மாற்றிகளில் ஏற்படும் பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய முயலக்கூடாது. மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.


 


இவ்வாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.