தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே மழை பெய்து வருகிறது. வழக்கமாக செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்வது வழக்கம். குறிப்பாக, தமிழ்நாடு பெரும்பாலும் வடகிழக்கு பருவமழையே பெரிதும் நம்பியிருக்கிறது.



அடுத்த 3 மணி நேரம்:


நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழையே தமிழ்நாட்டில் வழக்கத்தை விட அதிகளவு பெய்ததால், வடகிழக்கு பருவமழையும் அதிகளவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.







மக்கள் அவதி:

மழை பெய்யும் பகுதிகளில் தண்ணீர் தேங்குவதற்கும், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும் வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதாலும், நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை என்பதாலும் காலை முதல் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.


மேலும், இன்று முகூர்த்த நாள் என்பதாலும் திருமணம் உள்ளிட்ட பல்வேறு விசேஷங்கள் நடைபெற்று வருகிறது. இதனால், காலை முதல் மக்கள் சொந்த ஊர்களுக்கும், விசேஷங்களுக்கும் சென்று வரும் சூழலில் மழை பெய்து வருவதால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் காலையிலே பல இடங்களில் லேசான தூரலுடன் மழை பெய்து வருகிறது.