ரேஷன் அட்டைதாரர்களுக்கான குறை தீர்ப்பு முகாம் நாளை ஜூலை 9ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


குடும்பட்டையின் அவசியம்:


தமிழ்நாடு அரசின் திட்டங்களைப் பெறவும், பொதுவிநியோகக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மலிவு விலை அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களைப் பெறவும் ரேஷன் அட்டை முக்கியமானதாகும். இது பல்வேறு இடங்களில் ஆவணமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரசின் சார்பாக வழங்கப்படும் அட்டையாகும். குடிமக்களுக்கான இந்த ரேஷன் அட்டையானது முன்பு பேப்பரில் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஸ்மார்ட் கார்ட் மூலமாகவழங்கப்பட்டு வருகிறது. இந்த குடும்ப அட்டையில் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர்கள், முகவரி உள்ளிட்ட பல தகவல்களைக் கொண்டிருக்கும்.




முகாமில் வழங்கப்படும் சேவைகள்:


இந்த கார்டினை ஆன்லைன் மூலமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்றாலும், பொதுவிநியோக சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அது குறித்து தெரிவிக்க மாதந்தோறும் குறைதீர்ப்பு நாள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்படுவது வழக்கம். இந்த நாளில் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் புதிய பெயர்களை சேர்த்தல், பெயர் மாற்றம் செய்தல், பெயர்களை நீக்குதல், முகவரியை மாற்றுதல், தொலைபேசி எண்ணை பதிவு செய்தல் அல்லது மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் போன்ற சேவைகளை செய்துகொள்ளலாம்.


புகார் அளிக்கலாம்:


இந்த முகாமில், நியாய விலைக்கடைகளுக்கு நேரில் சென்று பொருள் பெற முடியாத நிலையில் இருக்கும் முதியவர்கள், ஊனமுற்றவர்கள் உள்ளிட்டோருக்கான அங்கீகாரச்சான்றும் பெற்றுக்கொள்ளலாம். கூடவே பொதுவிநியோகத் திட்டத்தில் உள்ள குழறுபடிகள், தங்கள் பகுதியில் உள்ள நியாயவிலைக்கடைகளின் செயல்பாடு, சேவைகளில் குறைபாடு, ரேஷன் பொருள்களை தனியாருக்கு விற்பது போன்ற புகார்கள் இருந்தாலும் இம்முகாமில்- கலந்துகொள்ளும் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம்.




நாளை முகாம்:


இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான குடும்ப அட்டை குறைதீர்ப்பு நாள் நாளை ஜூலை 9ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமானது சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைதீர்ப்பு முகாமில் கொடுக்கப்படும் புகார்கள்  மற்றும் குறைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.