திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் எம்எல்ஏ வீடு மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் வீடு உட்பட 49 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.


இன்று காலை 5 மணி அளவில் மன்னார்குடி வடக்கு வீதியில் உள்ள அவரது இல்லத்துக்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் வந்து லஞ்ச ஒழிப்பு சோதனையை தொடங்கினர். அதேபோல மன்னார்குடி முதல் தெருவில் உள்ள அதிமுக நகர செயலாளரும், ஆர்.காமராஜின் உறவினரான ஆர்.ஜி. குமார், வேட்டை திடலில் உள்ள காமராஜின் நண்பர் சத்தியமூர்த்தி வீடு, தஞ்சாவூரில் உள்ள ஆர் காமராஜ் சம்மந்தியின் வீடு, தஞ்சையில் காமராஜ் புதிதாக கட்டி வரும் மருத்துவமனை, சென்னையில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட 49 இடங்களில் இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது.





இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை தமிழக உணவு மற்றும் முகப்பொருள் துறை அமைச்சராக ஆர்.காமராஜ் இருந்தபோது தனது பதவியை தவறாக பயன்படுத்தி பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களை தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் நண்பர்கள் பெயரிலும் ரூபாய் 58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 252 அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக புகார் வந்துள்ளது. இதை அடுத்து காமராஜ் மற்றும் அவரது மகன்களான இனியன், இன்பன் மற்றும் காமராஜின் உறவினர்கள் மற்றும் நண்பர்களான மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், கிருஷ்ணமூர்த்தி மற்றும் உதயகுமார் ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது அரசு பதவியை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.




லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வரும் தகவல் அறிந்த அதிமுகவினர் ஏராளமானவர் மன்னார்குடி வடக்கு வீதியில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு கூடி வருகின்றனர்.  கட்சியினர் திமுக அரசை கண்டித்து முழக்கம் எழுப்பி வருகின்றனர். மேலும் காமராஜ் வீட்டின் முன்பாக அமர்ந்து 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் தமிழக அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.


மேலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்த வருவது முன்கூட்டியே காமராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு தெரியவந்து விட்டதாகவும் ஆகையால் எந்தவித ஆவணங்களும் பொருட்களும் கிடைக்கப் போவதில்லை எனவும் தகவல்கள் பரவி வருகின்றது. இதனிடையே மன்னார்குடி முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் உள்ள தொண்டர்களுக்கு மதிய உணவுகள் சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண