திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் காவி நிறம் அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அவரது எக்ஸ் தளத்தில் திருவள்ளுவர் சனாதான பாரம்பரியத்தின் துறவி என்று பதிவிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலடி தரும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 


அதில், 






தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று பதிவிட்டுள்ளார். 


மாட்டுப் பொங்கல் தினமான இன்று திருவள்ளுவர் தினமும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருவள்ளுவர் காவி உடை அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு திருவள்ளுவர் தினத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.


இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:


”தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்!


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.


133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. 


குறள் நெறி நம் வழி!
குறள் வழியே நம் நெறி!” இவ்வாறு முதலமைச்சர் பதிவிட்டுள்ளார். 


மேலும் படிக்க 


Kanguva 2nd Look: "இதை எதிர்பார்க்கலல" கண்களில் கனல் தெறிக்கும் கங்குவா புது போஸ்டர் ரிலீஸ்!


Governor Ravi: "சனாதன பாரம்பரியத்தின் துறவி” திருவள்ளுவரை கையில் எடுத்த ஆளுநர் ரவி - கிளம்பியது சர்ச்சை