தமிழக ஆளுநர் தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளின் கல்வித் தரத்தை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். அதேபோல, சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப்பள்ளியில் நேற்று நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவும், அந்த ஆன்மீக சொற்பொழிவின்போது அந்த சொற்பொழிவாளர் ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இரு சம்பவங்களும் தமிழக கல்வித்துறையிலும், தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அறிவியல் வழியே முன்னேற்றத்தின் வழி:


இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

"மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன. எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை - தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில், எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும் - அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன். அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி!"


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

பின்னணி என்ன?


தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையில் ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் வளர்ச்சிக்காகவும், அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.


இந்த சூழலில், நேற்று சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசுப்பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குருகுலக் கல்வி, மறுபிறவி குறித்து அவர் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை கேள்வி கேட்ட ஆசிரியருடன் அவர் வாக்குவாதம் செய்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தி.மு.க. அரசுக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலிலே, பள்ளிகளில் இனி கல்வியைத் தவிர மற்ற விஷயங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறையும் அதிரடி உத்தரவிட்டுள்ளது.