கொடி நாளில் பெரும் தொகையை வசூலித்து தருகிற செயலில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலமாக விளங்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள கொடிநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.


1949ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் கொடி நாள் ஆண்டுதோறும் டிசம்பர் 7ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.


இந்தியாவின் முப்படை வீரர்களின் தியாகம், அவர்கள் ஆற்றிய தொண்டுகளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த நாளில் நன்கொடைகள் திரட்டப்பட்டு முன்னாள் படை வீரர்களின் குடும்பங்கள், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.


இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடி நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:


இல்லத்தை மறந்து, எல்லையோரத்தில் பல இன்னல்களைத் தாங்கி, நாட்டுப்பற்று என்கிற நம்பிக்கையை மட்டும் இதயத்தில் ஏந்தி, இந்திய ஒருமைப்பாட்டுக்காக தவம் இருக்கிற முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, நம் சேமிப்பின் ஒரு பகுதியை ஒப்படைக்கும் உன்னதத் திருநாள், இந்தக் கொடிநாள்.


பெற்ற சுதந்திரத்தைபேணிக்காத்து, நாட்டின் அத்தனை பகுதிகளையும் பத்திரப்படுத்தும் உத்தமச் செயலை சமரசம் செய்து கொள்ளாமல், உயிரைத் துச்சமென மதித்து, சீருடைக்குள் தங்கள் எண்ணச் சிறகுகளையெல்லாம் ஒடுக்கி, ஆசைகளையெல்லாம் குறுக்கி, பகைவர்களை விரட்டும் ஒப்பற்ற செயலை மேற்கொள்கின்ற படை வீரர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்து தருவது நம் மகத்தான கடமை. 


 






படை வீரர்களின் வாழ்க்கை, 'நம் இல்லத்தைப் பார்த்துக்கொள்ள நாடே அணிதிரண்டு நிற்கிறது' என்கிற நன்னம்பிக்கை ஒளிவீச, கொடி நாளுக்கு கொடுக்கும் நம் கொடையே அத்தாட்சி. அது அவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு வகைகளில் பயன் தரும். கொடி நாளில் பெரும் தொகையை வசூலித்து தருகிற செயலில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. இந்த ஆண்டும் பெருமளவில் நிதி வழங்கி, அவர்தம் குடும்பத்தினருக்கு வணக்கத்தையும் நன்றியையும் காணிக்கையாக்கிட, உங்களுக்கு என் கோரிக்கையை வைக்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.