TN Agri Budget: ரேஷன் கடைகளில் இனிமேல் கேழ்வரகு, கம்பு - வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு

குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு மற்றும் கம்பு வழங்கப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு மற்றும் கம்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Continues below advertisement

 

 

தமிழ்நாட்டில் தற்போது நியாயவிலைக்கடைகள் மூலமாக அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நியாய விலைக்கடைகளில் கம்பு, கேழ்வரகு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வேளாண் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

“ கம்பு, கேழ்வரகு, வரகு, சோளம், பனிவரகு, திணை, குதிரைவாலி, சாமை ஆகியவை சிறு, குறு தானியங்கள், சிறு தானியங்கள் வறட்சியிலும் வளர்பவை. வளமற்ற மண்ணிலும் நலம்பெற்று துளிர்ப்பவை. ஊட்டச்சத்து நிறைந்தவை.

குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு, கம்பு

தமிழ்நாட்டில் அவற்றை மீண்டும் செழிக்கச் செய்யும் பொருட்டு, சிறுதானிய பரப்பு, உற்பத்தி, நுகர்வு ஆகியவற்றை அதிகரிக்கும் வகையில், கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் 20 மாவட்டங்களை உள்ளடக்கி அறிவிக்கப்பட்ட 2 சிறு,தானிய மண்டலங்களுடன் உழவர்களின் கோரிக்கைகளை ஏற்று நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்கள் புதியதாக சேர்த்துக் கொள்ளப்படும்.

சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்திட கூட்டுறவு சங்கங்கள் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட குறு தானியங்கள்  கொள்முதல் செய்யப்பட்டு சென்னை, கோயம்புத்தூர் மாநகர அமுதம், சிந்தாமணி, காமதேனு கூட்டுறவு விற்பனை அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சிறுதானியங்கள்:

2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அறிவித்திருப்பதை ஒட்டி, தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த இயக்கத்தில் வரும் ஆண்டில் தரிசு நிலங்களை சீர்த்திருத்தம் செய்தும், மாற்றுப்பயிர் சாகுபடி மூலமாகவும் 50 ஆயிரம் ஏக்கரில் சிறுதானிய சாகுபடி மேற்கொள்ளவும், சிறுதானிய விவசாயிகளை உருவாக்கி பயிற்சி அளிப்பதற்கும், 12 ஆயிரத்த 500 ஏக்கரில் தெளிப்பு நீர்ப்பாசனம் அமைக்கவும் மானியம் அளிக்கப்படும். சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய ஏதுவாக சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களுக்கு மானிய உதவி அளிக்கப்படும்.

மக்களிடையே சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு சிறுதானிய திருவிழாக்களும் இவ்வியக்கத்தின் மூலம் நடத்தப்படும். வரும் ஆண்டில் மத்திய, மாநில அரசு நிதியுதவியுடன் 82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சிறுதானிய உற்பத்தி, நுகர்வு ஆகியவற்றை அதிகரிக்கும் வகையில் முக்கிய சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு போன்றவற்றை நேரடியாக கொள்முதல் செய்த, நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். அரசு நிறுவனங்கள், கல்வி நிலைய விடுதிகளில் சத்துள்ள சிறுதானிய உணவு அளிக்கப்படும்.”

இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க:TN Agri Budget 2023 LIVE: சிறுதானிய விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு - வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் அதிரடி அறிவிப்பு

மேலும் படிக்க: TN Agri Budget Highlights: வேளாண் பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? ஓர் அலசல்

Continues below advertisement
Sponsored Links by Taboola