தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 1,997 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,69,398 ஆக அதிகரித்துள்ளது. 


குணமடைவோர் எண்ணிக்கை:  கடந்த 24 மணிநேரத்தில் 1,943 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,15,030 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 97.88% குணமடைந்துள்ளனர்.  


இறப்பு எண்ணிக்கை:  கடந்த 24 மணிநேரத்தில், கொரோனா தொற்று காரணமாக 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 34,230 ஆக அதிகரித்துள்ளது. 


சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை:  மாநிலத்தில், தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20,138 ஆக உள்ளது. இதில், 3ல் ஒருவர் சென்னை, கோயம்பத்தூர், தஞ்சாவூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களில்   1299 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 3400 பேர் ஆக்சிஜன் உதவி கொண்ட படுக்கையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதாவது, பாதிக்கப்பட்டவர்களில் 23% பேருக்கு தீவிர நுரையீரலைப் பாதிக்கும்   நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


மூன்றாவது அலையா? 



                


 


தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு சில தினங்களாக  அதிகரித்து வருகிறது. இருப்பினும், மாநிலத்தின் மொத்த தினசரி தொற்று உறுதி விகிதம் (Daily positivity Rate) 3ம் குறைவாக 1.2 ஆக உள்ளது. அதாவது, பரிசோதிக்கப்படும் 100 கொரோனா மாதிரிகளில் குறைந்தது 2 பேருக்கும் குறைவானோருக்கு மட்டுமே  கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,58,797 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த  பரிசோதனைகளின் எண்ணிக்கை 3  (3,82,11,132) கோடியாக அதிகரித்துள்ளது.


தொற்று விகிதத்தின் மூலம், சமூக அளவில் sars-cov-2 (கொரோனா வைரஸ்) பரவலின் தற்போதைய நிலை என்ன என்பதையும், நோய்த்தொற்று தாக்கத்திற்கு ஏற்ற பரிசோதனைகள் செய்யப்படுகிறதா ? என்பதையும் கணக்கிடமுடியும். எனவே, உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் குறைந்து காணப்படுவதன்  மூலம் சமூக அளவில் கொரோனா வைரஸின் பாதிப்பு குறைந்து வருவதை உணர முடிகிறது. இந்த தொற்று உறுதி விகிதம், மூன்றாவது அலையை ஏற்படுத்தாது என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.          


இரண்டாவது அலை ஓயவில்லை:  நாட்டில் கோவிட்-19 தொற்றின் இரண்டாவது அலை முற்றிலுமாக குறையவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை இணைச் செயலர் லாவ் அகர்வால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நோய்த் தொற்று குறைந்து வரும் நிலையில், ஒரு சில இடங்களில் மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது என்று கூறினார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கோவிட்-19 தொற்று அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத்துறை இணைச் செயலர் தெரிவித்தார்.


கோவிட் வைரஸுக்கு எதிரான எதிர் உயிரிகள் மக்களிடையே குறைவாக காணப்படும் மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் கூடுதலாக அனுப்பி வைக்கப்படுவதாக மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு தேவையான கோவிட் தடுப்பு மருந்துகள் போதிய அளவில் வந்து கொண்டிருப்பதாகவும் அவர்  தெரிவித்தார்.