அதிமுக அவைத் தலைவரும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மதுசூதனன் மறைந்தார். அவருக்கு வயது 80. திராவிட முன்னேற்றக்கழகத்திலிருந்து பிரிந்த எம்.ஜிஆர் 1972-ஆம் ஆண்டில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியதிலிருந்து அவருடன் பயணித்தவர் வடசென்னையின் முக்கிய முகமான மதுசூதனன். கட்சி வழியாக அறியப்பட்டது 1972-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் என்றாலும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் மன்றத் தலைவர் மது அண்ணன் என்பதுதான் இவரது ஆதிகால அடையாளம். பின்பு கட்சியினரிடையேயும் மது அண்ணன் என்கிற பெயரே இவருக்கு நிலைத்துப்போனது. எம்.ஜி.ஆரால் கட்சிக்கு அழைத்துவரப்பட்டவர், பின் கட்சியின் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 




எம்.ஜி.ஆரின் இறப்புக்குப் பிறகு அஇஅதிமுக ஆடும் அதிமுக என ஆட்டம் கண்டபோதெல்லாம்  நங்கூரமென இருந்து அது கவிழ்ந்துவிடாமல் காத்தவர் மதுசூதனன். எம்ஜிஆர் இறப்புக்குப் பிறகு கட்சி ஜானகி அணி ஜெயலலிதா அணி எனப்பிரிந்த காலத்தில் ஜெயலலிதா அணியைத் தேர்ந்தெடுத்தார். சிலர் வெளிப்படையாகவே ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுத்த காலத்தில் சுமார் ஒருவார காலம் போயஸ் தோட்டத்துக்குக் காவல் இருந்தார். அந்தக்காவல் 1989ல் சட்டசபைக் கலவரத்தின்போது சட்டமன்றம் வரை நீடித்தது. 


இதே மதுசூதனன்தான் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு கட்சியினர் தர்மயுத்தம் என்கிற பெயரில் சதுரங்க ஆட்டம் ஆடிய காலக்கட்டத்தில் தர்மம்தான் தன் சாய்ஸ் என பன்னீர்செல்வத்தின் பக்கத்தைத் தேர்ந்தெடுத்தார். 2010 முதல் கட்சியின் அவைத்தலைவராக இருந்துவந்த மதுசூதனனை பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்ததன் காரணமாகக் அவைத்தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கினார் சசிகலா. ’நீ என்ன என்னை நீக்குவது நான் உன்னை நீக்குகிறேன்!’ என சசிகலாவை கட்சிப் பொறுப்புகளிலிருந்தே நீக்கினார் மதுசூதனன்.   




கட்சியில் மாவட்டச் செயலாளராகத் தன் பயணத்தைத் தொடங்கிய மதுசூதனன் 1991-ஆம் ஆண்டில் ஆர்.கே.நகர் தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991ல் ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையிலேயே கைத்தறித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அந்தக் காலக்கட்டத்தை சென்னையின் கலவரக்காலம் எனலாம். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சுப்பிரமணியன் சுவாமி மீது அதிமுகவினர் நடத்திய தாக்குதல்,ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீதான ஆசிட் வீச்சு சம்பவம், தராசு ஊழியர் படுகொலை, ப.சிதம்பரம் வாகனம் மீது தாக்குதல், அண்ணா பல்கலை. துணை வேந்தராக அப்போது பதவி வகித்த முனைவர் அனந்தகிருஷ்ணன் வீடு மீது தாக்குதல், வக்கீல் விஜயன் மீதான கொலைவெறி தாக்குதல், மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரத்தின் மீதான தாக்குதல் என வன்முறைத் தாக்குதல்கள் ஒவ்வொன்றிலும் மதுசூதனன் பெயரும் அடிபட்டது.2000ம் ஆண்டில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட மதுசூதனன்தான் பின்னர் 2010ல் அதே ஜெயலலிதாவால் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.


தற்போதைய வடசென்னையின் பிரபல முகங்களான பாலகங்கா, சேகர்பாபு, ஜெயக்குமார் ஆகியோருக்கு முன்னோடி வடசென்னை மதுசூதனன். மதுசூதனன் அதிமுகவின் முகம் மட்டுமல்ல வடசென்னை என்னும் வரலாற்றின் ஒரு பகுதி. ஆழ்ந்த இரங்கல்.