சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,


“ குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டியிருக்கும்.




கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆகிய பகுதிகளில் தலா 9 செ.மீ. மழையும், குறைந்தபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், நீலகிரி மாவட்டம் குந்தா பாலம், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, கரூர் மாவட்டம் கடவூர், ஈரோடு மாவட்டம் பவானிசாகர், கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர், தஞ்சை, கரூர் மாவட்டம் பாலவிடுதி, திருப்பத்தூர் மாவட்டம் வடபுதுப்பட்டு, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், தேனி மாவட்டம் கூடலூர், நீலகிரி மாவட்டம் பர்லியார் ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.


வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் 26 அக்டோபர் முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து விலகி வடகிழக்கு பவருமழை தென்னிந்திய பகுதிகளில் எதிர்வரும் 26 அக்டோபரை ஒட்டி தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது.




இன்று குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். கேரளா கடலோரப்பகுதி,லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.”


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரியில் மழை தொடர்ந்து கடுமையாக பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண