வெயில் வாட்டி வதைத்தாலும் மாலை நேரத்தில் குளிர்ந்த காற்றுடன் இதமான சூழல் அவ்வப்போது நிலவி வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்பசலனம் காரணமாக இன்று மிதமான மழை இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் கடந்த ஜூன் 3ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் தற்போது பருவமழைக்கான அறிகுறிகள் ஆரம்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.  




இதனை தொடர்ந்து பருவமழை மற்றும் வெப்பசலனத்தால் வெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்திலும் தமிழகத்தின் சில பகுதிகளில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தின் சில கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையின் சில பகுதிகளில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை நகரை பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடனே காணப்படும். மேலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 




மேலும் வடக்கு வங்கக்கடலில் புதிய புயல் ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 11ம் (நாளை) தேதி இந்த புயல் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அரபிக்கடலில் உருவான டவ் தே புயல் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மற்றும் கேரளா மாநிலங்களை வாட்டிவதைத்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது மக்களிடையே பீதியை அளிக்கின்றது. டவ் தே புயலை தொடர்ந்து யாஸ் புயல் ஒடிசா மாநிலத்தை நிலைகுலையவைத்தது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் வடக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த தாழ்வு நிலை புயலாக மாறுமா அல்லது மாறாதா என்பதை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவலை வானிலை ஆய்வு மையம் கூறவில்லை. இருப்பினும் இந்த தாழ்வு நிலையானது சற்று வலுவானதாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் உருவாகும் இதே நேரம் அரபிக்கடலின் தென்மேற்கு பகுதியில் வலுவான காற்றும் வீசக்கூடும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலைப்பட்டால் ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட இடங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


கொரோனாவின் தாக்கம் ஒரு பக்கம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் வடமாநிலங்களில் புயலும் மழையும் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. அண்டை நாடான இலங்கையிலும் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறி மக்கள் பெரும் துன்பத்தை எதிர்நோக்கி வருவது குறிப்பிடத்தக்கது.