தமிழ்நாட்டில் காலை 8.30 மணி வரை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் காலை 10 மணி வரை 18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் காலை 8.30 மணி வரை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும்.


வங்கக்கடலில் வரும் 26 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என வானிலை ஆய்வு மையத்தில் தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.  


அதேபோல் நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்):


தொண்டி  (ராமநாதபுரம்) 81.6, பரங்கிப்பேட்டை (கடலூர்) 41.0, கன்னியாகுமரி 29.6, வால்பாறை (கோயம்புத்தூர்) 25.6, நுங்கம்பாக்கம் (சென்னை) 23.2, பாம்பன் (ராமநாதபுரம்) 20.5, மதுரை 17.6, அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 17.6, திருப்பத்தூர் 15.0, திருப்பதிசரம் (கன்னியாகுமரி) 59.5, விருதுநகர்  55.0, சிதம்பரம் (கடலூர்) 33.0, விஐடி சென்னை (செங்கல்பட்டு) 18.5, வம்பன்  (புதுக்கோட்டை) 131.0, ராமநாதபுரம் 85.5, அருப்புக்கோட்டை (விருதுநகர்) 37.5, கட்டப்பாக்கம் (காஞ்சிபுரம்) 28.5, கமுதி (ராமநாதபுரம்) 65.0, சத்தியபாமா_பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) 32.0,  ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம்  (காஞ்சிபுரம்) 18.5, புழல் (திருவள்ளூர்) 17.5 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


வங்க கடல் பகுதிகள்:


26.11.2023: தெற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 26-ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.