அகில இந்திய சுற்றுலாச் அனுமதிச் சீட்டு விதிகளுக்குப் புறம்பாக தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் அனைத்து ஆம்னிப் பேருந்துகளும் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாடு முழுவதிலும் 1,535 ஆம்னிப் பேருந்துகள் தமிழ்நாட்டில் பதிவு செய்து முறையாக இயங்கி வருகின்றன. இவைதவிர 943 ஆம்னிப் பேருந்துகள் பிற மாநிலங்களில் பதிவு செய்து அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று தமிழ்நாட்டிற்குள்ளாக அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளை மீறி இயங்கி வருகின்றன.


விதிகளுக்குப் புறம்பாக இயக்கப்படும் ஆம்னிப் பேருந்துகள்: இவ்வாறு விதிகளை மீறி இயங்கும் ஆம்னிப் பேருந்துகளால் அரசுக்கு, பேருந்து ஒன்றுக்கு ஒரு காலாண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.1,08,000 வீதம் ஆண்டொன்றிற்கு குறைந்த பட்சம் ரூ.4,32,000 நிதி இழப்பு எற்படுகிறது. மேலும் இத்தகைய பேருந்துகளின் உரிமையாளர்கள் நாகாலாந்து உள்ளிட்ட பிற மாநிலங்களில் தவறான ஆதாரங்களை சமர்ப்பித்து அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளுக்குப் புறம்பாக தமிழ்நாட்டிற்குள் முறைகேடாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் இயக்கி வருகின்றனர்.


இதனை ஒழுங்குபடுத்துவதற்கு போக்குவரத்து ஆணையரகத்தின் சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி, அவர்களின் கோரிக்கைகளுக்கேற்ப மூன்று முறை கால அவகாச நீட்டிப்பு வழங்கியும், மொத்தம் உள்ள 905 இதர மாநிலப் பதிவெண் கொண்டு அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று விதிகளுக்குப் புறம்பாக தமிழ்நாட்டிற்குள் இயங்கும் ஆம்னிப் பேருந்துகளில் 105 ஆம்னி பேருந்துகள் மட்டுமே முறையாக தங்களது பிற மாநிலப் பதிவெண்ணை ரத்து செய்துவிட்டு தமிழ் நாட்டில் மறுபதிவு செய்து முறையான அனுமதிச் சீட்டு பெற்று இயக்க ஆரம்பித்துள்ளனர்.


ஆனால், இன்னும் 800 ஆம்னிப் பேருந்துகள் போக்குவரத்து ஆணையரகத்தின் மூலம் விடுக்கப்பட்ட பலகட்ட எச்சரிக்கைகளையும் மீறி, தங்களது முறைகேடான மற்றும் சட்டத்திற்குப் புறம்பான இயக்கத்தை நிறுத்தவில்லை.


இத்தகையவர்களால் அரசிற்கு ஆண்டொன்றுக்கு குறைந்த பட்சம் ரூ.34.56 கோடி நிதி இழப்பு ஏற்படுகிறது. அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் அதனை முறைகேடாகப் பயன்படுத்தி அரசுப் போக்குவரத்து கழகங்கள், அரசு விரைவு போக்குவரத்து கழகங்கள் மற்றும் விதிகளின்படி முறையாக இயங்கி வரும் ஆம்னிப் பேருந்துகளின் இயக்கங்களை சீர்குலைக்கும் விதமாக பயணக் கட்டணங்களை வெகுவாகக் குறைத்து, முறைகேடாக இயக்கி வருவதால் அரசுப் பேருந்துகளுக்கும், முறையாக இயங்கி வரும் இதர ஆம்னிப் பேருந்துகளுக்கும் கடுமையான நிதி இழப்பினை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றன.


தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை: இவர்களின் இந்தப் போக்கு தமிழ்நாட்டில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் முறையாக இயங்கும் ஆம்னிப் பேருந்துகளின் இயக்கங்களையே சீர்குலைக்கும் விதமாக உள்ளது. மேலும், இத்தகைய பிற மாநில ஆம்னிப் பேருந்துகளின் முறைகேடான இயக்கத்தால், விபத்துகள் நேரிடும்பொழுது விதிகளை மீறி இயக்கப்பட்ட காரணத்தினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய இழப்பீடும் நிராகரிக்கப்படும்.


வாய்ப்புள்ளதால், பொதுமக்களுக்கு தேவையற்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, அவர்களின் நலனையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. எனவே, இத்தகைய முறைகேடாக மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக இயக்கப்படும் ஆம்னிப் பேருந்துகளின் இயக்கத்தை இனியும் அனுமதிக்க இயலாது.


மேலும், இவ்வாறு முறைகேடாக மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக இயங்கும் ஆம்னிப் பேருந்துகளின் உரிமையாளர்களின் மீதும் அவர்கள் முறைகேடாக எவ்வாறு பிற மாநிலங்களில் போலி ஆவணங்கள் கொடுத்து பதிவெண்ணும், அனுமதிச் சீட்டும் பெறுகிறார்கள் என்பது குறித்தும் ஆராயந்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.


இதுகுறித்து 13.06.2024 அன்று வெளியிடப்பட்ட பொது அறிவிப்பின் அடிப்படையிலும், அதனைத் தொடர்ந்து பக்ரித் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்ட காலக்கெடு நீட்டிப்பின் அடிப்படையிலும் இன்று முதல் (18.06.2024) பிற மாநிலங்களில் பதிவு செய்து அகில இந்திய சுற்றுலாச் அனுமதிச் சீட்டு விதிகளுக்குப் புறம்பாக தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் அனைத்து ஆம்னிப் பேருந்துகளும் உடனடியாக Detain செய்யப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அத்தகைய ஒரு ஆம்னிப் பேருந்தும் இனி இயங்குவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.


எனவே, அனைத்து மண்டல அலுவலர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் (சோதனைச் சாவடிகள் மற்றும் செயலாக்கப் பரிவில் பணிபுரிபவர்கள் உட்பட) உடனடியாக அவ்வாறு விதிகளை மீறி இயங்கும் ஆம்னிப் பேருந்துகளை உடனடியாக Detain செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


ஏற்கெனவே பொதுமக்கள் எவரும் அத்தகைய விதிகளை மீறி தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் பிற மாநில ஆம்னிப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அத்தகைய விதிகளை மீறி இயங்கும் பிற மாநில ஆம்னிப் பேருந்துகளின் விவரங்கள் www.tnsta.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


இந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை மீறி இயங்கும் பிற மாநில ஆம்னிப் பேருந்துகளில் பொதுமக்கள் முன்பதிவு செய்திருந்தால் அதனை உடனடியாக இரத்து செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.


அரசின் இந்த எச்சரிக்கையை மீறி மேற்படி விதிகளை மீறி இயக்கப்படும் ஆம்னிப் பேருந்துகள் இனி முடக்கப்படுவதால் பொதுமக்கள் இதில் பயணம் செய்ய இயலாது. பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமங்களுக்கு அரசு பொறுப்பேற்காது. மாறாக, அவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகும் பயணிகள் தொடர்புடைய ஆம்னிப் பேருந்துகளின் உரிமையாளர்களிடமே இந்த பாதிப்பிற்கான நிவாரணத்தைப் பெற முடியும்.


தமிழ்நாட்டிற்குள் முறையாக 1,535 ஆம்னிப் பேருந்துகள் இயங்கி வருவதால், பொதுமக்களுக்கு இதுகுறித்து எந்தவிதமான இடர்பாடுகளும் எழ வாய்ப்பில்லை.


இந்த எச்சரிக்கையை மீறி, இன்று பயணிகள் எவரேனும் அத்தகைய விதிகளை மீறி இயக்கப்படும் பிற மாநில ஆம்னிப் பேருந்துகளிலிருந்து இறக்கி விடப்பட்டால், மாற்று ஏற்பாடாக அவர்களின் ஊர்களுக்குக் கொண்டு செல்வதற்கு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகமும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களும் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளன.


இதுகுறித்து அந்தந்த மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தொடர்புடைய தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அலுவலர்களுடனும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களையும் தொடர்பு கொண்டு உரிய மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.


அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று அகில இந்திய சுற்றுலா விதிகளின் படி இயங்கும் ஆம்னிப் பேருந்துகள் தொடர்ந்து இயங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளை மீறி இயக்கப்படும் பிற மாநிலப் பதிவெண் கொண்ட ஆம்னிப் பேருந்துகள் மட்டுமே Detain செய்யப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.