திருச்சி சுகாதார மண்டல அலுவலகத்தில் பணி கண்காணிப்பாளராக பணியாற்றும் ராதிகா, தனக்கு வழங்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், " மனுதாரர் பணியிடத்தில் உடன் பணி புரிவோரை வீடியோ பதிவு செய்யக் கூடாது என பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து அதுபோல் செய்து வந்ததால் அவருக்கு சஸ்பெண்ட் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் மனுதாரர்கள் தொடர்ச்சியாக அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிவோரிடம் முறையாக நடந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் இந்த புகார் குறித்து விசாரிக்க விரும்பவில்லை. அரசு ஊழியர்கள் அலுவலக நேரங்களில் மொபைல் போன் பயன்படுத்துவது இயல்பான ஒன்றாக மாறி வருகிறது. அலுவலக நேரங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதும்,  அதன்மூலம் வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல. அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

 



 

ஏதேனும் அவசரம் எனில் முறையான அனுமதி பெற்று செல்போன் பயன்படுத்த வேண்டும் ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு,  "அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது, வீடியோ எடுப்பது மற்றும் அலுவலக நேரத்தில் பிரச்சினை நடைபெறும் நேரத்தில் வீடியோ எடுப்பது தொடர்பாக அரசு ஊழியர் விதிப்படி வழிகாட்டுதல்களை பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பப்பட வேண்டும். அரசு அலுவலர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது, செல்போன் கேமராக்களை பயன்படுத்தி வீடியோ எடுப்பது தொடர்பாக விதிகள் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான விலக்கு குறித்தும் விதிகள் உருவாக்கப்பட வேண்டும். அலுவலக பயன்பாட்டுக்கெனில் அதற்கென தனி செல்போன் மற்றும் தொலைபேசிகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக சுகாதாரத்துறை செயலர், இந்த உத்தரவு நகல் கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்கு உள்ளாக, உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

 



இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி, அரசு விரைவு போக்குவரத்து கழக கிளைமேலாளர் தொடர்ந்த வழக்கு  தள்ளுபடி

 

மதுரை அரசு விரைவு போக்குவரத்து கழக கிளைமேலாளராக பணிபுரிந்த அபிமன்யு,   திருச்சிக்கு இடமாறுதல்  செய்யப்பட்டார். இந்த இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி அபிமன்யு, மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், "தொழிற்சங்கத்தினர் தூண்டுதலால் தன்னை இடமாறுதல் செய்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு்ளது. சம்பந்தப்பட்ட தொழிற்சங்கத்தினர் மீது மனுதாரர் சட்டப்படி புகார் அளிக்கலாம். போக்குவரத்து கழகங்களின் அன்றாட நடவடிக்கையில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது. இதனால் மனுதாரர் இடமாறுதலில் தலையிட வேண்டியதில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.