வரும் 4ம் தேதி முதல் 6ம் தேதி வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், “


வருகின்ற 4ம் தேதியான நாளை (வெள்ளி கிழமை, தேய்பிறை முகூர்த்தம்) மற்றும் 5ம் தேதி (சனிக்கிழமை), 6ம் தேதி (ஞாயிறு) ஆகிய வார இறுதி நாட்களை முன்னிட்டு 4ம் தேதி நாளை சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இந்நாள் வரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து பயணம் மேற்கொள்ள 6,948 பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர். இருந்த போதிலும் பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு நாளை முதல் தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி . சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 400 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இதுமட்டுமின்றி, ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது ஞாயிறு பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 8,107 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஒரு காலண்டர் மாதத்தில் 5 முறைக்கு மேல் ஒரே தடத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு சிறப்பு சலுகையாக அடுத்து வரும் தொடர் பயணங்களுக்கு அதாவது 6-வது பயணம் முதல் 50% கட்டணச்சலுகை அளிக்கப்படுகிறது. இதன்படி கடந்த ஜூலை மாதம் 857 பயணிகளுக்கு இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.


மேற்கூறிய சலுகையை பெற பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டப்படுகிறது. முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவைக்கேற்ப போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பேருந்து சேவையை அளிக்க ஏதுவாகும் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கும் முன்பதிவு சேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.


அடுத்த வாரம் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் சுதந்திர தினத்தை ஒட்டி தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் மற்றும் சுற்றுலா தலங்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 


எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.