சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வௌியிட்டார். இன்று அவர் பேசியதாவது,


“தமிழர் நாகரீகம் பண்டைய நாகரீகம் என்பதற்கான அசைக்க முடியாத தொல்லியல் சான்றுகள் உள்ளன. இதை யாராலும் அசைக்கவோ, மறுக்கவோ முடியாது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி தற்போது உலக அரங்கில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. செங்கல் கட்டுமானம், தங்க அணிகலன்கள், பானைகள் உள்ளிட்டவை அங்கு கண்டறியப்பட்டுள்ளன.


கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கீழடி, கொற்கை, சிவகளை உள்ளிட்ட இடங்களில் தற்போது தொல்லியல் ஆய்வு நடைபெற்று வருகிறது. கி.மு. 6ம் நூற்றாண்டிற்கு முன்பாகவே கொற்கை துறைமுகம் செயல்பட்டுள்ளது.




வெளிநாடுகளுடனும் தமிழர்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது. ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் கடல் வணிகம், முத்து குளித்தல் எனப்பல விஷயங்கள் அகழாய்வில் தெரியவந்துள்ளது.


2018ம் ஆண்டு நேரில் சென்று கீழடி அகழ்வாராய்ச்சிப் பணிகளை பார்வையிட்டேன். தமிழ் பண்பாட்டை அறிய தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன்தொடர்ச்சியாக, நெல்லையில் ரூபாய் 15 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்”


இவ்வாறு அவர் பேசினார்.


மேலும் பல்வேறு செய்திகளை படிக்க : இனி நேரில் வேண்டாம்.. இன்டர்நெட் போதும்.. எல்எல்ஆர், லைசென்ஸ் புதுப்பிக்க புதிய வசதி!


முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு தமிழறிஞர்களும், வரலாற்று அறிஞர்களும் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர். மதுரை அருகே கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி மூலமாக ஏற்கனவே தமிழர்களின் நாகரீகம் மிகவும் தொன்மையானது என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும், பல காலமாக ஆதிச்சநல்லூரிலும் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும், ஆதிச்சநல்லூரில் தொல்லியல் ஆய்வுகள் நடத்தினால் பல்வேறு அரிய தகவல்களும், தமிழர்களின் நாகரீகம் பற்றி இதுவரை வெளிவராத பல தகவல்களும் வெளிவரும் என்று வரலாற்று மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




கீழடியில் கண்டறியப்பட்ட மெளரியப் பேரரசர் அசோகர் காலத்திற்கு முந்தையது. சூரியன், நிலவு வடிவிலான வெள்ளிக்காசு கி.மு. 4ம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும். ஆதிச்சநல்லூர், கொற்கை மற்றும் சிவகளை பகுதிகள் அடங்கிய “பொருநை ஆற்றங்கரை நாகரீகம்” 3200 ஆண்டுகள் பழமையானது என அமெரிக்காவின் பீடா ஆய்வு மைய பரிசோதனையில் தெரியவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் பல்வேறு செய்திகளை படிக்க : ABP NADU EXCLUSIVE : ‘என்னிடமிருந்து மிரட்டி வாங்கப்பட்ட பையனூர் பங்களாவை மீட்டுக்கொடுங்கள்’ முதல்வருக்கு கங்கை அமரன் கோரிக்கை..!