அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி திங்களன்று குடல் இறக்க நோய் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை முடிவடைந்த நிலையில் அவர் தனது சொந்த காரில் வீடு திரும்பியுள்ளார். கடந்த இரண்டு மாத காலமாக அனல் பறக்கும் தேர்தல் பரப்புரையில் முதலவர் பழனிசாமி ஈடுபாடு வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வரும் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 


66 வயது நிரம்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் 7வது முதல்வராக கடந்த பிப்ரவரி 2017ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் என்ற இடத்தில் கருப்ப கவுண்டருக்கு தவசியம்மாளுக்கும் பிறந்த இவர் 1974ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகாவை பொறுத்தவரை சேலம் மாவட்டத்தில் முக்கிய நபராக கருதப்பட்ட இவர் 1998 தேர்தலில் போட்டியிட்டு எம்.பிஆக தேர்வு செய்யப்பட்டார்.




முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மற்றும் பன்னீர் செல்வம் உள்ளிட்டோரின் ஆட்சியின்போது எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுக அமைச்சராக பணியாற்றினார் என்பதும் நினைவுகூரத்தக்கது. இந்த ஆண்டு நடந்த தமிழக தேர்தல் பரப்புரையின்போது பல காரசாரமான விவாதங்கள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக திமுகவின் ராசா மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. 


திருவொற்றியூர் அதிமுக வேட்பாளர் குப்பனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  ”என் தாயை எப்படியெல்லாம் இழிவுப்படுத்தி திமுகவினர் பேசுகின்றனர்” என குறிப்பிட்டு அப்போது உணர்ச்சிவசப்பட்டு பேசினார். ”முதலமைச்சரின் தாயை பற்றியே இவ்வாறு பேசுபவர்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்கள், தாய்மார்களின் நிலை என்ன? அவர்களுக்கு இவர்களால் எப்படி பாதுகாப்பு வழங்கமுடியும் என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, தான் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்றும், தனது தாய் இரவு பகல் பாராமல் உழைத்தவர் எனவும் குறிப்பிட்டு, ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் உயிர் தந்தவர் தாய், அவரை இழிவுபடுத்துவர்களுக்கு ஆண்டவன் தண்டனை கொடுப்பான்” என்று பேசியிருந்தார். 




இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடந்த வாக்குபதிவில், எடப்பாடி பழனிசாமி காலை 10.40 மணியளவில் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு தனது குடும்பத்தினருடன் சென்றார். பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்தார். தனது முறை வந்தவுடன் தனது பேரனுடன் வாக்குச்சாவடி மையத்தின் உள்ளே சென்றார். அங்கு அவர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தனது வாக்கினை அளித்தார். 


தீவிர பரப்புரை மற்றும் தேர்தலுக்கு பிறகு ஹெர்னியா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது சிகிச்சை முடிந்து வீடுதிரும்பியுள்ளார்.