மாணவர்களுக்கு உடல், மன நலம் சார்ந்த விழிப்புணர்வு வாகனங்களை சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் இத்தகைய விழிப்புணர்வு வாகனங்களை அவர் தொடங்கி வைத்தார். சுமார் 805 விழிப்புணர்வு வாகனங்கள் தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களுக்கு உடல், மன நலம் சார்ந்த விழிப்புணர்வை அளிக்கவுள்ளது. இந்த வாகனத்தில் உளவியல் ஆலோசகர், மருத்துவர்கள் இடம்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. 






திட்டத்தை தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் மாணவிகளிடத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”கொரோனாவால் என் தொண்டை பாதிக்கப்பட்டாலும், தொண்டு பாதிக்காது. மருந்துகளை விட, மாணவர்களின் முகம் காண்பது சிறந்தது. மாணவர்களின் முகம் காணும்போது நலம் பெறுகிறேன். பள்ளி மாணவர்கள் காலை உணவை எப்போதும் தவற விடாதீர்கள். மாணவர்களிடம் நலன் பற்றி நான் தனியாக உரையாடியபோது ஐந்தில் 3 மாணவர்கள் காலை உணவை சாப்பிடவில்லை என கூறினார்கள். 


இதையடுத்து பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்திற்கான அரசாணையில் நேற்றுதான் கையெழுத்திட்டேன். அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இலவச காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு தன்னம்பிக்கை தானாக வந்துவிடும். பள்ளிகள் வெறும் மதிப்பெண் பெறும் கூடங்களாக மட்டும் இருக்கக்கூடாது. பாடங்கள் நடத்தும் கூடங்களாக மட்டும் இருந்துவிடக் கூடாது. மாணவர்களின் அறிவு, ஆற்றல், மனம், உடல் ஆகிய அனைத்தும் பலப்படுத்தும் இடமாக பள்ளிக்கூடங்கள் அமைய வேண்டும் எப்போதும் சுறுசுறுப்புடன் இருங்கள், சோம்பேறித்தனம் நம் வளர்ச்சிக்கு தடை என்பதை புரிந்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார். 


முன்னதாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி, திருவள்ளூர் மாணவி சரளா ஆகியோர் தற்கொலை சம்பவங்கள் தமிழகத்தையே அதிர வைத்தன. தொடர்ந்து மாமல்லப்புரம், விக்கிரவாண்டி, மேட்டூர், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, விருத்தாச்சலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்களும், சில இடங்களில் அதற்கான முயற்சிகளும் பலருக்கும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. 


இதனைத் தடுக்க உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனிடையே நேற்றைய தினம் குருநானக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமீபகாலமாக தமிழகத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை எண்ணிப் பார்த்தபோது  எனக்கு உள்ளபடியே மனவேதனையாக இருக்கிறது. மாணவிகளுக்கு மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ எத்தகைய இழிசெயல் நடந்தாலும் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என தெரிவித்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண