தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 9-ந் தேதி முதல் நடைபெறும் என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி 9ம் தேதி  காலை 10 மணிக்கு  ஆளுநர் உரையுடன்  தமிழக  சட்டப்பேரவை கூட உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் 9ம் தேதி பேரவை தொடங்குகிறது. அதைதொடர்ந்து, 9ம் தேதி நடைபெற உள்ள அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும்  என முடிவு செய்யப்படும்.


சட்டப்பேரவை கூட்டத்தொடரை  முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா முன்னெச்சரிக்கையாக,  பேரவைக்கு மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்பது கட்டாயமில்லை எனவும், சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சர்வதேச அளவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தொற்று பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட இருப்பது முக்கியத்துவதும் வாய்ந்ததாக உள்ளது.