தமிழ் நாட்டில் பழமையான அடுக்குமாடி குடியிருப்பில் புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள குடியிருப்பு உரிமையாளர்களில் மூன்றில் இரண்டு சதவிகிதத்தினர் ஒப்புதல் தெரிவித்தாலே போதும்.


இனி, அடுக்குமாடி குடியிருப்பை இடித்துவிட்டு புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மூன்றில் இரண்டு சதவிகித உரிமையாளர்களில் ஒப்புதலே போதும்.


இந்த விவகாரத்தில் திருத்தப்பட்ட விதிகள் அடங்கிய தமிழ்நாடு அரசின் புதிய அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்டத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். 


தமிழ் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பு வசதி அறிமுகமாகி 50 ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டது. இதனால், பல்வேறு வீடுகள் மோசமான நிலையில் உள்ளன. பல சமயங்களில், இவற்றை புனரமைக்கும் திட்டத்திற்கு அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாமல் இருக்கிறது.


இதன் விளைவாக, தமிழ் நாட்டில் உள்ள பல பழைய அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழும் அபாயத்தில் இருக்கின்றன.


அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்டம் 1994இல் பல்வேறு பாதகமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளதால் கடந்த ஆண்டு அதற்கு மாற்றாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்டம் மசோதாவை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்திருந்தது. 


இதில் பழமை வாய்ந்த கட்டிடத்தை இடிப்பதற்கோ அல்லது புனரமைக்க பணிகளை மேற்கொள்ளவோ அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு உரிமையாளர்களின் ஒப்புதல் போதுமானது என்பது இடம்பெற்றிருந்தது.


இச்சட்டத்தின் படி 4 குடியிருப்புகளுக்கு மேல் உள்ள அடுக்குமாடி வளாகத்தில் ஒரு சங்கம் இருப்பது அவசியமாகிறது. ஒவ்வொரு வளாகத்திற்கு ஒரு சங்கம் மட்டுமே இருத்தல் அவசியம். குடியிருப்பில் உள்ள ஒரு உறுப்பினர் பொதுவான பயன்பாடு மற்றும் பராமரிப்பு கட்டணத்தை செலுத்தாத பட்சத்தில் நிலுவை கட்டணத்தை செலுத்தும் வரை வீட்டினை விற்பனை செய்ய முடியாது உள்ளிட்ட விதிகள் சேர்க்கப்பட்டன.


இந்த மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் தமிழ் நாடு அரசின் அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்டம் 2022க்கு குடியரசு தலைவர்  திரௌபதி முர்மு ஒப்புதல் கிடைத்துள்ளது. தமிழ் நாடு அரசு புதிய விதிகளை அறிவிக்கும் நாளில் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும். 


தமிழ் நாடு அரசின் அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்டம் 2022 வரவேற்றுள்ள கட்டட நிறுவனங்கள் சொத்து மேம்பாட்டாளர்கள் மற்றும் அடுக்குமாடி வீடுகளின் உரிமையாளர்கள் இதன் மூலம் பழமை அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும் மறுவடிவம் பெரும் சூழல் உருவாகி இருப்பதாக கூறியுள்ளனர். 


தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் குடியிருப்பு வளாகங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் கட்டப்பட்டு வருகின்றன. அதை, வாங்குவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


இந்த சூழ்நிலையில், சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.